இன்றைய கிரிக்கெட் உலகில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களை எடுத்துக் கொண்டால் அதில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித்துக்கு மிகப்பெரிய இடம் இருக்கிறது. ஒரு பந்துவீச்சாளராக தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்து அணியில் இடம் பிடித்து, பின்பு தன்னுடைய பேட்டிங் முறையை மாற்றி அமைத்து தீவிர பயிற்சி செய்து மெருகேற்றி, பேட்டிங் செய்வதற்கு கடினமான வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருப்பது என்பது அவ்வளவு சாதாரண காரியம் கிடையாது. அதை தன்னுடைய கடின உழைப்பால் சாத்தியப்படுத்தி இருக்கிறார் ஸ்மித்.

Advertisement

தற்பொழுது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டிக்கு முன்பாக டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் ஓய்வு பெற இருக்கிறார்கள் என்கின்ற தகவல் பரவியது. இங்கிலாந்து முன்னாள் வீரர் மற்றும் கேப்டன் மைக்கேல் வாகனும் இப்படி கூறியிருந்தது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இதுகுறித்து டேவிட் வார்னர் ஆரம்பத்தில் தன்னுடைய ஓய்வு இப்போது கிடையாது என்று பேசினாலும், அந்தக் குறிப்பிட்ட பேட்டியில் இறுதியில், இந்த வருடம் கடைசியில் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் விளையாட ஆஸ்திரேலியா வரும் பாகிஸ்தான் தொடரோடு தான் ஓய்வு பெற இருப்பதாக வெளிப்படையாக அறிவித்து விட்டார்.

Advertisement

இந்தத் தொடருக்குப் பிறகு டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருக்க மாட்டார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சதம் அடித்ததோடு, இதற்கு அடுத்து தொடங்கிய ஆஷஸ் டெஸ்ட் தொடரிலும் சதம் அடித்து, முக்கியமான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் நேற்று அரை சதம் அடித்துள்ள ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 32 சதங்கள் குவித்துள்ளார். நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கும் இவர் ஓய்வு பெறுவாரா? இல்லையா? என்கின்ற கேள்வி சுற்றிக் கொண்டே இருந்தது. தற்பொழுது இதற்கு நேரடியாக பதில் அளித்து இருக்கிறார் ஸ்மித்.

இதுகுறித்து பேசிய அவர், “நான் ஓய்வு பெறவில்லை. நான் ஓய்வு பெறுவதாக யாரிடமும் சொல்லவில்லை. இப்படி இருக்கும் பொழுது இப்படியான ஒரு செய்தி எங்கிருந்து புறப்பட்டு வந்தது என்று எனக்கு புரியவே இல்லை. நான் என்னுடைய பேட்டிங்கை நன்றாக உணர்கிறேன். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பின்பாக நான் நேற்று விளையாடிய இந்த இன்னிங்ஸை மிக நன்றாக உணர்ந்தேன். நிச்சயம் நான் இந்த ஆசஸ் தொடரில் நிறைய ரன்களை விரும்பினேன்.

ஆனாலும் கூட இங்கு இந்த குளிர்காலத்தில் ஆறு ஆட்டங்களில் இரண்டு சதங்கள் அடித்து இருப்பது என்பது நியாயமான ஒன்றுதான். எங்களில் பலருக்கு பேட்டிங்கில் நல்ல துவக்கம் கிடைத்தது. எங்களால் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. மேலும் 40 ரன்கள் 50 ரன்கள் இருந்த பார்ட்னர்ஷிப்புகளை எங்களால் 100 ரன்கள் 150 ரன்கள் என்று மாற்ற முடியவில்லை. இந்த வகையில் எனக்கு இது கொஞ்சம் ஏமாற்றமே. முக்கியமாக என்னுடைய ஓய்வு இப்பொழுது கிடையாது” என்று கூறியுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News