எம்எல்சி 2023: ராயுடுவுக்கு மாற்றாக முன்னாள் வீரரைத் தேர்வு செய்தது சூப்பர் கிங்ஸ் நிர்வாகம்! 

Updated: Thu, Jul 13 2023 14:08 IST
எம்எல்சி 2023: ராயுடுவுக்கு மாற்றாக முன்னாள் வீரரைத் தேர்வு செய்தது சூப்பர் கிங்ஸ் நிர்வாகம்!  (Image Source: Google)

அண்மையில் நடந்த ஐபிஎல் தொடருடன் சென்னை அணியின் அதிரடி வீரர் அம்பாதி ராயுடு ஓய்வை அறிவித்தார். இதனால் ராயுடுவை மீண்டும் கிரிக்கெட் களத்தில் பார்க்க முடியாது என்று ரசிகர்களிடையே கருதப்பட்டது. இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அமெரிக்கா மேஜர் லீக் தொடரில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை வாங்கியது. இந்த அணிக்காக அம்பாதி ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதனால் மேஜர் லீக் தொடரில் விளையாடுவதற்காகவே அம்பாதி ராயுடு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்ததாக பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென மேஜர் லீக் தொடரில் இருந்து சொந்த காரணங்களுக்காக விலகுவதாக அம்பாதி ராயுடு அறிவித்தார். இதனால் சென்னை அணி ரசிகர்கள் சோகமடைந்தனர். இந்த நிலையில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக முன்னாள் சிஎஸ்கே வீரர் ஒருவரை ஒப்பந்தம் செய்து அணி நிர்வாகம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 27 போட்டிகளில் விளையாடியுள்ள இம்ரான் தாஹிர் டெக்ஸால் சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் சிஎஸ்கே அணியில் 2018 முதல் 2021 வரை விளையாடியுள்ளார். சென்னை அணி 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். விக்கெட் வீழ்த்திய பின், கைகளை அகலமாக விரித்துக் கொண்டு ஓடிச் சென்று கொண்டாடுவதால், ரசிகர்கள் இவரை பராசக்தி எக்ஸ்பிரஸ் என்று கொண்டாடி வந்தனர்.

அதேபோல் இம்ரான் தாஹிர் ஐபிஎல் மட்டுமல்லாமல் தி ஹண்ட்ரட், பிஎஸ்எல், பிக் பேஷ் லீக், வங்கதேச பிரீமியர் லீக் என்று ஏராளமான கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர். தற்போது அமெரிக்காவின் மேஜர் லீக் தொடரிலும் பங்கேற்க உள்ளார். 44 வயதிலும் டி20 லீக் போட்டிகளில் இம்ரான் தாஹிர் விளையாடி வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை