ஒவ்வொரு ஷாட்டையும் என்ஜாய் செய்து அடிப்பதால் மட்டுமே ரன் குவிக்க முடிகிறது - சூர்யகுமார் யாதவ்!

Updated: Sun, Nov 20 2022 17:52 IST
IND v NZ, 2nd T20I: Was really important for me to bat till the end, says Suryakumar Yadav (Image Source: Google)

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நியூசிலாந்தின் பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. 

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி 51 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 191 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி 3 விக்கெட்டுகளையும், பெர்குசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்பின் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான பின் ஆலன் ஒரு ரன் கூட எடுக்காமல் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான டீவன் கான்வே 25 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் நீண்ட நேரம் தாக்குபிடித்து 52 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தாலும், மற்ற வீரர்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்காமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 18.5 ஓவரில் 126 ரன்கள் மட்டும் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

இந்தநிலையில், நியூசிலாந்து அணியுடனான இந்த போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய ஆட்டநாயகன் சூர்யகுமார் யாதவ், திட்டங்கள் சரியாக இருந்து, அதை முறையாக செயல்படுத்தினால் ரன்களும் இலகுவாக சேர்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், “நியூசிலாந்து அணியுடனான இந்த வெற்றி மகிழ்ச்சியை கொடுக்கிறது. வெற்றியுடன் இந்த தொடரை தொடங்கியுள்ளது மகிழ்ச்சி தான். இந்த போட்டியில் எனது வேலை என்ன என்பதில் நான் தெளிவாக இருந்தேன், எனது வேலையை சரியாக செய்து கொடுக்க தேவையான அனைத்து திட்டங்களுடன் தான் நான் களத்திற்குள் வந்தேன். 

திட்டங்களை சரியாக செயல்படுத்தினால் போதும், ரன்களும் இலகுவாக சேர்க்க முடியும். 170 முதல் 175 ரன்கள் எடுத்துவிட்டால் போதும் என்றே நினைத்தோம், அதுவே வெற்றிக்கு போதுமான ரன்கள் என நினைத்தோம், ஆனால் அதைவிட 20 ரன்கள் கூடுதலாக எடுத்தது மகிழ்ச்சி தான். 

ஒவ்வொரு ஷாட்டையும் என்ஜாய் செய்து அடிப்பதால் மட்டுமே என்னால் இலகுவாக ரன் குவிக்க முடிகிறது என கருதுறேன். அதே போல் இதற்காக கடுமையான பயிற்சிகளும் செய்துள்ளோம். சரியான பயிற்சியும், திட்டங்களும் இருந்தால் களத்தில் எவ்வித அழுத்தமும் இல்லாமல் விளையாடலாம்” என்று தெரிவித்தார்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை