நம் வீரர்களை எண்ணி பெருமைப்படுகிறேன் - ஷிகர் தவான்!

Updated: Wed, Oct 12 2022 11:55 IST
Image Source: Google

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது .

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாக விளங்கினர். துவக்கம் முதல் இறுதி வரை அவர்களுக்கு சரியாக அமையவில்லை. 99 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக க்ளாஸன் 34 ரன்கள் அடித்திருந்தார். குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். சிராஜ், சபாஷ் அகமது மற்றும் வாஷிங்டன் சுந்தர் மூவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

அடுத்ததாக பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு சுப்மன் கில் மிகச்சிறப்பாக விளையாடினார். 49 ரன்கள் அடித்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை துரதிஷ்டவசமாக தவறவிட்டார். அடுத்ததாக வந்த ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 28 ரன்கள் அடிக்க, இந்திய அணி 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் அடித்து 7 விக்கெடுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் போட்டியில் தோல்விக்கு பிறகு, அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் வென்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா. இதுகுறித்து பேசிய தவான், “நம்ம பசங்க தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டு விளையாடிய விதம் கண்டு நான் பெருமைப்படுகிறேன். இளம் வீரர்கள் பொறுப்புடன் முதிர்ச்சியை வெளிப்படுத்தி விளையாடினார்கள். எங்களுடன் பயணித்த அணி நிர்வாகிகளுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

முதல் ஆட்டத்தில் நாங்கள் நிறைய தவறுகளை செய்தோம். சில கேட்சுகளை நாங்கள் தவறவிட்டோம். ஆனால் ஒருபோதும் நாங்கள் எங்களுக்கு அழுத்தம் கொடுத்துக்கொள்ளவில்லை. எங்கள் செயல்பாட்டின் மீது தீராத நம்பிக்கை கொண்டிருந்தோம். நான் எங்களது இந்த ஆட்டத்தை முழுமையாக ரசிக்கிறேன். எனது இந்திய அணி இது. 

என் அணிக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன். கடினமான பேட்டிங் ஆடுகளங்களில் நமது வீரர்கள் சிறப்பான தன்மையை வெளிப்படுத்தினர். பந்து வீச்சாளர்கள் செயல்பாடு அபாரமாகவும் இருந்தது” என தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை