IND vs SL, 2nd Test: டெஸ்ட் தொடரிலும் இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!

Updated: Mon, Mar 14 2022 21:40 IST
IND v SL: India Complete Yet Another Series Win, Clean Sweep Sri Lanka 2-0 (Image Source: Google)

இந்தியா - இலங்கை இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மொஹாலியில் நடந்தது. அந்த போட்டியில் அபாரமாக விளையாடி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னஸ்வாமி மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்தது. கடந்த 12ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டுமே அபாரமாக பேட்டிங் ஆடி 92 ரன்களை குவித்தார். 

ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமாக இருந்ததால், மற்ற வீரர்கள் அனைவரும் அந்த சவாலை எதிர்த்து திறம்பட ஆடமுடியாமல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, தடுப்பாட்டம் ஆடாமல் அதிரடியாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் 92 ரன்களை குவித்தார். அவரது பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி வெறும் 109 ரன்களுக்கு சுருண்டது. பும்ரா அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.

அதன்பின் 143 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில், இந்த இன்னிங்ஸிலும் ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 28 பந்தில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். 

ரிஷப் பண்ட் 50 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 67 ரன்களும் அடிக்க, ரோஹித் சர்மா 46 ரன்கள் அடித்திருந்தார். 2ஆவது இன்னிங்ஸில் 303 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது இந்திய அணி.

447 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இலங்கை அணியில் குசால் மெண்டிஸ் நன்றாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அவர் களத்தில் நிலைக்கவில்லை. 54 ரன்களில் குசால் மெண்டிஸ் ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் அனைவருமே ஒருமுனையில் தொடர்ச்சியாக சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டனும் தொடக்க வீரருமான திமுத் கருணரத்னே மட்டும் நிலைத்து நின்று சிறப்பாக பேட்டிங் ஆடினார்.

ஸ்பின்னிற்கு சாதகமான ஆடுகளத்தில் அஸ்வின், ஜடேஜா, அக்ஸர் ஆகிய தரமான ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொண்டு பேட்டிங் ஆடி சதமடித்த கருணரத்னேவை 107 ரன்களில் பும்ரா வீழ்த்த, எஞ்சிய 3 விக்கெட்டுகள் மளமளவென விழுந்ததால், 208 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட்டானது.

இதன் மூலம் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 2-0 என இலங்கையை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை