‘அஸ்வின் ஒரு விஞ்ஞானி’ - வைரலாகும் சேவாக் ட்வீட்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவந்த இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தாலும், அடுத்ததாக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
அதிலும் வங்கதேசத்தின் டாக்கா நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி விரட்டியது. தொடக்கம் முதலே இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து வந்தது. இதனால் 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி.
அப்போது அஸ்வின் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்து வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது இந்திய அணிக்கு வெற்றி கூட்டணியாக அமைந்தது. இருவரும் 8ஆவது விக்கெட்டிற்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். அஸ்வின், இரண்டாவது இன்னிங்ஸில் 62 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இந்தப் போட்டியில் மொத்தம் 6 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார். முதல் இன்னிங்ஸில் 12 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் அவர் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். இந்த சூழலில்தான் சேவாக், அஸ்வின் குறித்து ட்வீட் செய்துள்ளார்.
அவரது ட்வீட்டில், “அருமையான இன்னிங்ஸ் ஆடினார் அஸ்வின். ஸ்ரேயாஸ் ஐயருடன் அற்புதமான கூட்டணியும் அமைத்தார். இதை செய்தது விஞ்ஞானி. எப்படியோ இது கிடைத்துவிட்டது” என சேவாக் ட்வீட் செய்துள்ளார். இவரது ட்வீட் இணையத்தில் வைரலாகியுள்ளது.