இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரரான வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் டேரில் மிட்செல், புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த மார்ட்டின் கப்தில் - மார்க் சாப்மன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், விக்கெட் இழப்பையும் தடுத்தனர்.
இதில் இருவரும் அதிரடியாக விளையாடி 100 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மேலும் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். 15ஆவது ஓவரை வீசிய ரவிச்சந்திரன் அஸ்வின், 63 ரன்களைச் சேர்த்த மார்க் சாப்மன் விக்கெட்டை வீழ்த்தியதுடன், கிளென் பிலீப்ஸின் விக்கெட்டையும் அதே ஓவரில் வீழ்த்தி அசத்தினார்.
இருப்பினும் மறுமுனையில் அபாயகரமான சிக்சர்களை பறக்கவிட்டு வந்த மார்ட்டின் கப்தில் 70 ரன்களைச் சேர்த்து பெவிலியனுக்குத் திரும்பினார். அடுத்து வந்த வீரர்களும் ரன்களைச் சேர்த்த சிரம்மப்பட்டனர்.
Also Read: T20 World Cup 2021
இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.