IND vs SL : அதிரடியில் மிரட்டிய தாவான், இஷான் கிஷான், பிரித்வி ஷா; இலங்கையை பதம்பார்த்த இந்தியா!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது.
இருப்பினும் கடைசி ஓவர்களில் கருணரத்னே அதிரடியாக விளையாடி அணி வலுவான ஸ்கோரை நிர்ணயிக்க உதவினார். இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் இலக்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கருணரத்னே 48 ரன்களை எடுத்தார்.
அதன்பின் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு இளம் வீரர் பிரித்வி ஷா அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். அவருக்கு பந்துவீசிய அனைவரது ஓவர்களிலும் பவுண்டரிகள் பறந்தன. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பிரித்வி ஷா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து அறிமுக போட்டியில் களமிறங்கிய இஷான் கிஷன், சந்தித்த முதல் பந்தையே சிக்சருக்கு பறக்கவிட்டு தனது எண்ட்ரியைக் கொடுத்தார். அவரும் கிடைத்த பந்துகளை எல்லாம் பவுண்டரி எல்லைக்கு அனுப்ப, ஒருகணம் இலங்கை பந்துவீச்சளர்களுக்கு என்ன செய்வதேன்று தெரியாமல் விழிபிதுங்கினர்.
தொடர்ந்து அபாரமாக விளையாடி இஷான் கிஷான் தனது அறிமுக போட்டியிலேயே 33 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினர். பின் 59 ரன்கள் எடுத்திருந்த இஷான் கிஷான் சண்டகன் பந்துவீச்சி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதுவரை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான், அதன்பின் தனது ரன் வேட்டையைத் தொடர்ந்து அரைசதம் அடித்தார். இதன்மூலம் இந்திய அணியின் வெற்றியும் உறுதியானது.
அவருக்குத் துணையாக மனீஷ் பாண்டே 26 ரன்களையும், மற்றொரு அறிமுக வீரர் சூர்யகுமார் யாதவ் 31 ரன்களையும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
இதன் மூலம் 33.4 ஓவர்களிலேயே இந்திய அணி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிகர் தவான் 86 ரன்களை சேர்த்து அசத்தினார்.