Emerging Asia Cup 2024: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!

Updated: Sat, Oct 19 2024 22:48 IST
Image Source: Google

India A vs Pakistan A, ACC Emerging Teams Asia Cup 2024: ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் ஓமனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கெப்டன் திலக் வர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பந்துவீச அழைத்தர். இதையாடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவெ உயர்ந்தது. மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 35 ரன்னில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 36 ரன்களை எடுத்திருந்த நிலையில் பிரப்ஷிம்ரன் சிங்கும் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் திலக் வர்மா மற்றும் நெஹல் வதேரா ஆகியோரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். இதில் நெஹால் வதேரா 25 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஆயுஷ் பதோனியும் 2 ரன்னுடன் நடையைக் கட்டினார். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் திலக் வர்மாவும் 44 ரன்களை எடுத்திருந்த கையோடு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இறுதியில் ரமந்தீப் சிங் 17 ரன்னில் ரன் அவுட்டாக, இறுதியில் ராகுல் சஹார் பவுண்டரியும், ரஷிக் சலாம் சிக்ஸரும் விளாசி அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்தியா ஏ அணியானது 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்துள்ளது. பாகிஸ்தான் அணி தரப்பில் சுபியான் முகீம் 2 விக்கெட்டுகளையும், முகமது இம்ரான், ஸமான் கான், அராஃபாத் மின்ஹாஸ், காஸிம் அக்ரம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முகமது ஹாரிஸ் மற்றும் யாசிர் கான் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் முதல் பந்திலேயே சிக்ஸரை பறக்கவிட்ட முகமது ஹாரிஸ் அடுத்த பந்தில் க்ளீன் போல்டாகி பெவிலியான் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஒமைர் யூசுஃபும் 2 ரன்களில் நடையைக் கட்டினார். அதன்பின் யாசிர் கானுடன் இணைந்த கசிம் அக்ரமும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அதிரடியாக விளைடாடி வந்த யாசிர் கான் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 33 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அவரைத்தொடர்ந்து 27 ரன்களில் காசிம் அக்ரமும், 9 ரன்களில் ஹைதர் அலியும் என விக்கெட்டுகளை இழக்க, பாகிஸ்தான் அணியானது தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த அராஃபத் மின்ஹாஸ் மற்றும் அப்துல் சமத் இணை அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. பின்னர் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 41 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் அராஃபத் மின்ஹாஸ் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து அப்துல் சமத்துடன் இணைந்த அப்பாஸ் அஃப்ரிடியும் பவுண்டரிகளை விளாச, இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது. 

Also Read: Funding To Save Test Cricket

இறுதியில் பாகிஸ்தான் அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்திய அணி தரப்பில் அந்த ஓவரை அன்ஷுல் காம்போஜ் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸர் அட்க்கும் முயற்சியில் 25 ரன்களைச் சேர்த்திருந்த அப்துல் சமாத் விக்கெட்டை இழந்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தர்பபில் அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டுகளையும், ரஷிக் சலாம், நிஷாந்த் சிந்து ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்தியா ஏ அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் ஏ அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை