அண்டர் 19 உலகக்கோப்பை: ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது இந்தியா!

Updated: Sun, Feb 06 2022 01:47 IST
India are the 2022 ICC U19 Men's Cricket World Cup champions (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த அண்டர் 19 உலகக்கோப்பை தொடரானது இன்றுடன் நிறைவடைந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஜேம்ஸ் ரெவ்வின் பொறுப்பான ஆட்டத்தினால் 44.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ரெவ் 95 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ராஜ் பாவா 5 விக்கெட்டுகளையும், ரவி குமார் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை துரத்திய இந்திய அணியில் ரகுவன்ஷி ரன் ஏதுமின்றியும், ஹர்னூர் சிங் 21 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த ஷேக் ரஷீத் - யாஷ் துல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது. பின் 17 ரன்களில் யாஷ் துல் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த கையோடு ரஷீதும் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் களமிறங்கிய நிஷாந்த் சந்து - ராஜ் பாவா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை உறுதிசெய்தது. இதில் ராஜ் பாவா 35 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த நிஷாந்த் சந்து அரைசதம் கடந்தார். 

இறுதியில் தினேஷ் பானா அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் இந்திய அணி 47.4 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அண்டர் 19 அணி ஐந்தாவது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றி சாதனைப்படைத்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை