மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவியது இந்திய அணி!

Updated: Fri, Oct 04 2024 22:59 IST
Image Source: Google

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைற்ற நான்காவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

அதன்படி துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து மகளிர் அணிக்கு சூஸி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிளிம்மர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் சூஸி பேட்ஸ் 27 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஜார்ஜியா பிளிம்மர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 34 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அமெலியா கெரும் 13 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் சோஃபி டிவைன் மற்றும் புரூக் ஹாலிடே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி ஸ்கோரை உயர்த்தினர். 

இறுதியில் 16 ரன்கள் எடுத்த நிலையில் புரூக் ஹாலிடே தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் சோஃபி டிவைன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 7 பவுண்டரிகளுடன் 57 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக் ரேனுகா சிங் 2 விக்கெட்டுகளையும், ஆஷா சோபனா, அருந்ததி ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்மிருதி மந்தனா பவுண்டரியுடன் இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில், மறுமுனையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி வர்மா 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாட முயற்சித்த ஸ்மிருதி மந்தனாவும் 12 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். ஆனால் அவர்களாலும் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாற, ஹர்மன்பிரீத் கவுர் 15 ரன்களுக்கும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீராங்கனை ரிச்சா கோஷ் 12 ரன்களுக்கும், அருந்ததி ரெட்டி ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழக்க, இந்திய மகளிர் அணியானது 75 ரன்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Also Read: Funding To Save Test Cricket

அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளும் நியூசிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இந்திய மகளிர் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் ரோஸ்மேரி மெய்ர் 4 விக்கெட்டுகளையும், லியா தஹுஹு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், நடப்பு உலகக்கோப்பை தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை