சாம்பியன்ஸ் கோப்பை 2025: மிட்செல், பிரேஸ்வெல் அரைசதம்; இந்திய அணிக்கு 252 டார்கெட்!

Updated: Sun, Mar 09 2025 18:02 IST
Image Source: Google

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

இந்நிலையில் இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் முதல் விக்கெட்டிற்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், வில் யங் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அவரைத்தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரச்சின் ரவீந்திரா 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 37 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் குல்தீப் யாதவின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து அணியின் அனுபவ வீரர் கேன் வில்லியம்சனும் குல்தீப் யாதவின் இரண்டாவது ஓவரிலேயெ ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். இதனால் அந்த அணி 75 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த டேரில் மிட்செல் - டாம் லேதம் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். 

இதில் லேதம் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கிளென் பிலீப்ஸும் தனது பங்கிற்கு 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 34 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். இதற்கிடையில் நிதானமாக விளையாடி வந்த டேரில் மிட்செல் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்த நிலையில், 3 பவுண்டரிகளுடன் 61 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் இறுதியில் மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் கேப்டன் மிட்செல் சான்ட்னர் இணை சிறப்பாக செயல்பட்டதுடன் தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி ஸ்கோரை உயர்த்தினர். 

Also Read: Funding To Save Test Cricket

இறுதியில் மிட்செல் சான்ட்னர் 8 ரன்களில் ரன் அவுட்டாகிட, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியை மைக்கேல் பிரேஸ்வெல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை