WI vs IND, 3rd ODI: விண்டீஸை பந்தாடி தொடரை வென்றது இந்தியா!

Updated: Wed, Aug 02 2023 10:30 IST
WI vs IND, 3rd ODI: விண்டீஸை பந்தாடி தொடரை வென்றது இந்தியா! (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் உள்ளன. 

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு மீண்டும் ஓய்வளிக்கப்பட்டது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இஷான் கிஷான் - ஷுப்மன் கில் இணை வழக்கம் போல் தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடக்கம் கொடுத்தனர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடக்க, இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்ததது.

அதன்பின் 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 77 ரன்களை எடுத்திருந்த இஷான் கிஷன் ஆட்டமிழக்க, அடுத்துகளமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட்டும் 8 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் களமிறங்கியது முதலே சிக்சர்களை பறக்கவிட்டு அதிரடி காட்டினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 2 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசி அரைசதம் கடந்த கையோடு 51 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதேசமயம் மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில்லும் 85 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா - சூர்யகுமார் யாதவ் இணையும் மளமளவென ஸ்கோரை உயர்த்தினர். இதில் சூர்யகுமார் 35 ரன்களில் ஆட்டமிழந்தாலும், பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ஹர்திக் பாண்டியா அரைசதம் கடந்தார். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 70 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்களைக் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ செஃபெர்ட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் ரன்கள் ஏதுமின்றியும், கைல் மேயர்ஸ் 4 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப், கேசி கார்டி, ஷிம்ரான் ஹெட்மையர், ரெமாரியோ செஃபெர்ட் என அதிரடி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

இதில் அலிக் அதானஸ் 32 ரன்களையும், அல்ஸாரி ஜோஸப் 26 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குடகேஷ் மோட்டி 39 ரன்களையும் சேர்த்த நிலையில் மீதமிருந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 35.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை