ராகுலின் தவாறால் தான் இந்தியா தோற்றது - சுனில் கவாஸ்கர் விமர்சனம்!

Updated: Fri, Jan 07 2022 16:07 IST
Image Source: Google

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. எனினும் ஜொகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டை தென்னாப்பிரிக்க அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 

இந்நிலையில் 240 ரன்கள் இலக்கை விரட்டியபோது தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எல்கர் 96 ரன்களும் வான் டர் டுசென் 40 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார்கள். ஆட்ட நாயகனாக எல்கர் தேர்வானார். 3ஆவது டெஸ்ட், கேப் டவுனில் ஜனவரி 11 அன்று தொடங்குகிறது.

இந்நிலையில் கோலிக்குப் பதிலாக இந்திய அணியின் கேப்டனாகப் பணியாற்றிய கேஎல் ராகுல் பற்றி முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய கவாஸ்கர், “விராட் கோலி விளையாடாத டெஸ்டில் இந்திய அணி முதல்முறையாகத் தோற்றுள்ளது. கேஎல் ராகுலைப் பற்றி சொல்லவேண்டும் என்றால், டீன் எல்கரின் இன்னிங்ஸில் அவருக்கு ஆரம்பத்தில் சுலபமாக ஒரு ரன்னைப் பலமுறை எடுக்க உதவினார். 

இதனால் விளையாடுவது எல்கருக்குச் சுலபமாக இருந்தது. ஹூக் ஷாட்டை எல்கர் அவ்வளவாக விளையாட மாட்டார். அதனால் எல்லைக்கோட்டுக்கு அருகே இரு ஃபீல்டர்களை நிற்கவைத்ததில் அர்த்தமில்லை. இதனால் ஒரு ரன்னை அடிக்கடி எடுத்து நிறைய ரன்களை எல்கர் ஸ்கோர் செய்தார். 

இந்திய அணியின் ஃபீல்டிங்கும் சிறப்பாக இருந்திருக்கலாம். இந்தியா தோற்றது என்பதை விட 2ஆவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது என்பதே சரி” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை