பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக். இவருக்கு கடந்து சில நாள்களாக நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியாகின. ஆனால் இன்ஸமாம் இதனை மறுத்துள்ளார்.
தன்னுடைய யூடியூப் சேனலில் இதுதொடர்பாக பேசியுள்ள அவர், “எனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக் வெளியான செய்திகளை நான் பார்த்தேன். எனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவரைச் சென்று பார்த்தேன். எனக்கு ஆஞ்சியோகிராபி பரிசோதனை செய்யவேண்டும் எனச் சொன்னார்கள். அப்போது ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
அந்த அடைப்பை நீக்க ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. இந்தச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. மருத்துவமனையில் 12 மணி நேரமே அனுமதிக்கப்பட்டேன். பிறகு வீடு திரும்பிவிட்டேன். தற்போது நலமாக உள்ளேன். அசெளகரியமாக உணர்ந்ததால் உடனடியாக மருத்துவரைச் சென்று சந்தித்தேன். இதயத்துக்கு அருகில் அல்ல, வயிற்றுப்பகுதியில்.
மருத்துவப் பரிசோதனையை நான் தாமதப்படுத்தியிருந்தால் என் இதயம் பாதிக்கப்பட்டிருக்கும் என மருத்துவர்கள் கூறினார்கள்” என்று தெரிவித்தார்