ஆஃப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை பிடித்து ஆட்சியமைத்துள்ளனர். அவர்கள் பெண்களுக்கான உரிமைகளை பறித்து வருகின்றனர். பெண்கள் விளையாட்டில் சேரக்கூடாது, பள்ளிக்கு செல்லக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெண்கள், சிறியவர்கள், ஆண்கள் என அனைவரும் போட்டியை நேரில் பார்த்து ரசிக்கிறார்கள்.
உற்சாகத்திலும், தங்களுடைய அணி வீரர்களை உற்சாகப்படுத்தவும் பெண்களும் ஆட்டம் போடுவார்கள். ஏற்கனவே பெண்களுக்கு எதிரான முடிவகளை எடுத்து வரும் தலிபான்கள், பெண்கள் போட்டியை பார்ப்பதாலும் ரசிகர்கள் ஆட்டம் போடுவதாலும் ஐபிஎல் போட்டிகளை ஆஃப்கானிஸ்தானில் ஒளிபரப்பக்கூடாது என்று ஊடகங்களுக்கு தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆஃப்கானிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் முன்னாள் செய்தி தொடர்பாளர் ஃபவாத் அமான் தனது ட்விட்டர் பதிவில், “ஆஃப்கானிஸ்தானில் ஐபிஎல் கிரிக்கெட் ஒலிபரப்புக்குத் தாலிபான் தடைவிதித்துள்ளது. பெண்கள் நடனமாடுவதாலும், மைதானங்களில் பெண் பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் இருப்பதாலும் அதை ஒளிபரப்பக் கூடாது என ஆஃப்கான் ஊடகங்களுக்கு தாலிபான் எச்சரிக்கை விடுத்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.