ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் வெறும் 2 போட்டியில் மட்டும் தான் வெற்றியடைந்துள்ளது. எஞ்சியுள்ள ஐந்து போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதே கடினம் என்ற நிலையில் உள்ளது.

Advertisement

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் கடைசி ஓவரில் மிரட்டல் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்ததாக இன்று (25-4-22) நடைபெறும் போட்டியில் மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

Advertisement

கடந்த வருட ஐபிஎல் தொடர்களை போன்று இல்லாமல், இந்த வருட ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அதிகமான இளம் வீரர்களை எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதில் ஓரிருவரை தவிர மற்றவர்களுக்கு பெரிதாக வாய்ப்பு கொடுப்பது இல்லை.

அப்படியாக, திறமை இருந்தும் சென்னை அணியின் ஆடும் லெவனில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்படும் மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

டேவன் கான்வே

நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான டெவன் கான்வே டூபிளசிஸியின் இடத்தை சரியான நபர் என்றே எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சென்னை அணி கான்வேவிற்கு இந்த தொடரில் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு கொடுத்துள்ளது. 

Advertisement

முதல் போட்டியில் சொதப்பியதால் அவரை ஆடும் லெவனில் இருந்து முழுமையாக நீக்கிய சென்னை அணி, ராபின் உத்தப்பாவை துவக்க வீரராக களமிறக்கி வருகிறது. கான்வேவிற்கு சரியான வாய்ப்பு கிடைத்தால் அது நிச்சயம் சென்னை அணியின் பேட்டிங் ஆர்டருக்கு கூடுதல் வலு சேர்க்கும் என்பதே கிரிக்கெட் வல்லுநர்கள் பலரின் கருத்தாக உள்ளது.

ராஜ்வர்தன் ஹங்ரேக்கர்

சமீபத்தில் நடைபெற்ற 19 வயதுகுட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் மிக முக்கிய வீரராக ஜொலித்த ராஜவர்தன் ஹங்ரேக்கரை, 1.5 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்த சென்னை அணி, அவருக்கு இந்த தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

Advertisement

பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்படக்கூடியவரான ராஜவர்தன் ஹங்ரேக்கருக்கு சென்னை அணியின் ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

நாரயணன் ஜெகதீஷன்

தமிழகத்தை சேர்ந்த இளம் வீரரான ஜெகதீஷன் கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து சென்னை அணியில் இடம்பெற்றுள்ளார், ஆனால் சென்னை அணியோ அவருக்கான வாய்ப்பு சரியாக கொடுப்பதே இல்லை. சமீபத்தில் நடைபெற்ற சையத் முஸ்தாக் அலி தொடர், விஜய் ஹசாரே தொடர் என அனைத்து உள்ளூர் தொடர்களிலும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் ஜெகதீஷனுக்கு சென்னை அணியின் ஆடும் லெவனில் இடம் கிடைப்பதே அரிதாக உள்ளது. 

Advertisement

ருத்துராஜ் கெய்க்வாட் இந்த தொடரில் மிக மோசமாக செயல்பட்டு வரும் நிலையில், அவருக்கு ஓரிரு போட்டிகளில் ஓய்வு கொடுத்துவிட்டு அவருக்கு பதிலாக ஜெகதீஷனுக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்கலாம் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News