ஐபிஎல் 2022: ஃபர்குசன் வேகத்தில் சரிந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!

Updated: Sat, Apr 02 2022 23:24 IST
IPL 2022: Gujarat Titans beat Delhi Capitals by 14 runs (Image Source: Twitter)

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி புனேவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் மேத்யூ வேட் ஒரு ரன்னில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழக்க, விஜய் சங்கர் 20 பந்தில் 13 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 31 ரன்னில் ஆட்டமிழந்தார். 

தொடக்கம் முதலே அடித்து அதிரடியாக ஆடிய ஷுப்மன் கில் 46 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் அடித்து சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். பின்வரிசையில் ராகுல் திவேத்தியா 8 பந்தில் 14 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, 20 ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் அணி 171 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ்  தரப்பில் முஸ்தபிசூர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

அதன்பின் இலக்கை துரத்திய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர் டிம் செய்ஃபெர்ட் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவிடம் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் பிரித்வி ஷா 10, மந்தீப் சிங் 18 ரன்கள் என லோக்கி ஃபர்குசனின் ஒரே ஓவரில் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ரிஷப் பந்த் - லலித் யாதவ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.

பின் 25 ரன்களில் லலித் யாதவ் ஆட்டமிழக்க, 43 ரன்கள் எடுத்திருந்த ரிஷப் பந்தும் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் சென்றனர்.

இதனால் 20 ஓவர்களில் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் லோக்கி ஃபர்குசன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி இந்த சீசனில் இரண்டாவது வெற்றியைப் பெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை