ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸை 157 ரன்களில் சுருட்டியது சிஎஸ்கே!

Updated: Sat, Apr 08 2023 21:20 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் ‘எல் கிளாசிகோ’ என்றழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் ஐபிஎல் தொடரின் 1000ஆவது போட்டி இது என்பதாலும் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. 

இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தேனி முதலில் பந்துவீச தீர்மானித்து மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி மும்பை இந்தியன்ஸின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - இஷான் கிஷான் ஆகியோர் களமிறங்கினர். 

முதல் ஓவர் முதலே அதிரடி காட்டிய இந்த இணை பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ளியது. அதன்பின் 21 ரன்களைச் சேர்த்திருந்த ரோஹித் சர்மா, துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதேசமயம் மறுமுனையில் அதிரடி காட்டி வந்த இஷான் கிஷானும் 32 ரன்களில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

இதையடுத்து, சிஎஸ்கே அணியின் விக்கெட் வேட்டை தொடர்ந்தது. கேமரூன் கிரீன் 12, திலக் வர்மா 22 ரன்களிலும், அர்ஷ்த் கான் 2 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 5 ரன்களிலும் என ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 31 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். 

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே, மிட்செல் சாண்ட்னர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை