ஐபிஎல் தொடரின் பத்தாவது லீக் போட்டியில் லக்னோ அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையே லக்னோ மைதானத்தில் நடைபெற்றது.  இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இந்த முடிவுக்காக அவர் இன்று முழுவதும் வருத்தப்படுவார் என்பது உண்மை.

Advertisement

அபிஷேக் சர்மாவுக்கு பதில் துவக்க ஆட்டக்காரராக இடம் பெற்ற விக்கெட் கீப்பர் அன்மோல்பிரீத் சிங் 26 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 41 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அப்துல் சமாத் அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார்.

Advertisement

இவர்களைத் தவிர எந்த பேட்ஸ்மேன்களும் மெதுவான லக்னோ ஆடுகளத்தில் நிலைத்து விளையாடவில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ அணித்தரப்பில் சிறப்பாக பந்து வீசிய குர்னால் பாண்டியா நான்கு ஓவர்களுக்கு 18 ரன்கள் விட்டு தந்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதற்கு அடுத்து களம் இறங்கிய லக்னோ அணிக்கு கேப்டன் ராகுல் 35 ரன், குர்னால் பாண்டியா 34 ரன் எடுக்க 16 ஓவர்களில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு இலக்கை எட்டி மூன்றாவது ஆட்டத்தில் தனது இரண்டாவது வெற்றியை லக்னோ அணி பதிவு செய்தது. இரண்டு ஆட்டத்தில் இரண்டு ஆட்டங்களையும் ஹைதராபாத் அணி தோற்று உள்ளது.

போட்டிக்கு பின் ஆட்டநாயகன் விருது வாங்கிய குர்னால் பாண்டியா பேசுகையில், “எங்களுடைய கேம்பில் இன்று மிகவும் நல்ல நாள். விக்கெட்டுகள் மற்றும் ரன்கள் இரண்டும் நான் கடினப்பட்டு சம்பாதித்தவை. மொத்தத்தில் எல்லாமே சிறப்பு. அவர்கள் வரிசையில் அதிகமான வலது கை பேட்ஸ்மேன்கள் இருந்தார்கள். இதனால் நான் நான்கு ஓவர்கள் பந்து வீசுவேன் என்று எனக்கு நன்றாக தெரியும். 

இந்த வருடத்தில் நான் நல்ல இடத்தில் இருந்தேன். நமக்கு ஒரு விஷயத்தில் தெளிவு கிடைப்பது முக்கியம். நான் செயல்படுவதில் மட்டுமே கவனம் செலுத்தினேன் முடிவுகளைப் பற்றி கண்டுகொள்ளவில்லை. கடந்த மூன்று நான்கு மாதங்களில் நான் மிகவும் சிறப்பாகவே இருந்து வருகிறேன். நான் பந்தை திருப்புவதில்லை என்று மக்கள் சொல்கிறார்கள். மார்க்ரம் விக்கட்டை நான் வீழ்த்திய முறை அதற்கு பதில் சொல்வதாக இருக்கும். 

Advertisement

ஐபிஎல் தொடரில் கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக மும்பை அணிக்கு நான் எப்படி செயல்பட்டுக் கொண்டிருந்தேன் என்பதை நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். பேட்டிங்கில் நான்காவதாக வந்து சீராகச் செயல்பட்டு கொண்டிருந்தேன். அதே ரிதமை நான் தற்பொழுது மீட்டெடுக்க முயற்சி செய்கிறேன். நான் ஆட்டநாயகன் விருது குறித்து சிந்திக்கவில்லை. இந்த விருதை எனக்கு எல்லா நேரத்திலும் ஆதரவாக இருந்த என் மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News