எங்களது தோல்விக்கு இதுதான் காரணம் - டேவிட் வார்னர்!
16ஆவது சீசன் தொடரில் நேற்று நடைபெற்ற 55ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக மிச்சேல் மார்ஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக பதிரனா 3 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றிபெற்றது.
இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டனான டேவிட் வார்னர், முதல் மூன்று விக்கெட்டுகளை விரைவாக இழந்ததே தோல்விக்கான முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய டேவிட் வார்னர், “முதல் மூன்று விக்கெட்டுகளை நாங்கள் விரைவாக இழந்துவிட்டோம், குறிப்பாக முதல் ஓவரிலேயே நான் விக்கெட்டை இழந்து, எங்களுக்கு நாங்களே நெருக்கடியை ஏற்படுத்தி கொண்டோம். எங்கள் அணிக்கு துவக்க வீரர்கள் தான் முக்கிய பலம், ஆனால் அதுவே எங்களுக்கு இந்த போட்டியில் சரியாக அமையவில்லை. 168 ரன்கள் என்பது இலகுவாக எட்டக்கூடிய இலக்கு தான்.
முதல் 6 ஓவர்களை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே எப்படிப்பட்ட இலக்கையும் எட்ட முடியும். எங்களுக்கு ஒரு பார்ட்னர்சிப் கூட சரியாக அமையவில்லை. நான் சில விசயங்களை முயற்சித்து பார்தோம், ஆனால் அது எங்களுக்கு சாதகமாக அமையவில்லை” என்று தெரிவித்தார்.