சூர்யகுமாரை இந்த இடத்தில் களமிறக்க வேண்டும் - வீரேந்திர சேவாக்!
மும்பை இந்தியன்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரை சற்று முன்னும் பின்னுமாக துவங்கியிருந்தாலும், லீக் சுற்றின் இரண்டாம் பாதியில் மிகச்சிறப்பாக விளையாடி இப்போது பிளே ஆப் சுற்றுக்குள் நெருங்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. அவர்களது பலம் கடப்பாரை பேட்டிங். அதை பயன்படுத்தி எப்பேர்பட்ட ரன்களையும் சேடஸ் செய்ய முடியும் என்பதை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு விளையாடினார்கள். 3 முறை 200+ ரன்களை இந்த சீசனில் சேஸ் செய்து சாதனை படைத்துள்ளார்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக சேஸிங் செய்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சூர்யகுமார் யாதவ். அவரை நான்காவது அல்லது ஐந்தாவது வீரராக களம் இறங்குகின்றனர். இன்னும் ஒருபடி மேலே சென்று மூன்றாவது இடத்தில் களமிறக்கினால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் அறிவுரை கூறியுள்ளார் .
இதுகுறித்து பேசிய அவர், “மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நம்பர் 3 இடத்தில் சூர்யகுமார் யாதவை நிரந்தரமாக களமிறங்க வேண்டும். ஏனெனில் வேகப்பந்துவீச்சு மற்றும் ஸ்பின் இரண்டையும் எந்தவித அசவுகரியமும் இன்றி எதிர்கொள்ளக் கூடியவர். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை பொறுத்துதான் இறங்குவார்கள் என்றாலும், சூரியகுமார் யாதவ் நிறைய பந்துகளை பிடித்தால் அது அவர்களுக்கு தான் அதிக வெற்றி வாய்ப்புகளை உருவாக்கும் என்று நான் அனைத்து இனமாக நம்புகிறேன்.
கடைசி 7 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதம் அடித்திருக்கிறார். அவர் மூன்றாவது வீரராக களமிறங்கவில்லை என்றாலும் முதல் இரண்டு விக்கெட்டுகளை விரைவாக இழந்து விட்டனர். அந்த நேரத்தில் உள்ளே வந்து அடித்திருக்கிறார். ஒரு படி மேலே சென்று மூன்றாவது இடத்தில் சூரியகுமார் யாதவை களமிறக்கினால் இன்னொரு விக்கெட்டை பறிகொடுக்காமல் காக்கலாம். மேலும் அதிக பந்துகளை சூரியகுமார் விளையாடினால் அதற்கேற்றவாறு ரன்களும் அணிக்கு வரும். அவரது ஃபார்மை பொறுத்து நீங்க இறக்கிவிடலாம். இப்போது சிறந்த பார்மில் இருப்பதால் மூன்றாவதாக இறங்குவது சரியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.