சக்ரவர்த்திக்கு 20ஆவது ஓவரை கொடுத்ததன் காரணம் என்ன? - நிதீஷ் ரானா பதில்!

Updated: Fri, May 05 2023 13:15 IST
IPL 2023: Whoever Is Bowling Better, I Try To Give Him The Tough Overs, Says Nitish On Giving Chakar (Image Source: Google)

ஹைதராபாத் நகரில் நேற்று நடைபெற்ற 47ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசஸ் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற போட்டியில் நித்திஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தினர்.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் கேப்டன் நிதீஷ் ராணா தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது துவக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து தவித்தாலும் நித்திஷ் ராணா 42 ரன்களையும், ரிங்கு சிங் 46 ஆகியோரது அற்புதமான பாட்னர்ஷிப் காரணமாக ஒரு நல்ல ஸ்கோரை எட்டியது.

அதோடு பின் வரிசையில் ரஸல் 24 மற்றும் அனுகுல் ராய் 13 ஆகியோரும் கைகொடுக்க கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியானது துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இருந்தாலும் அந்த அணியின் கேப்டன் மார்க்ரம் (41) மற்றும் கிளாசன் (36) ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக நல்ல நிலையை ஈட்டியது.

இறுதியில் அப்துல் சமாத் (21) ஓரளவுக்கு முயற்சி செய்தும் அவர்களால் 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் காரணமாக 5 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது. 

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் நித்திஷ் ராணா கூறுகையில், “மிடில் ஓவர்களில் நாங்கள் சில மோசமான ஓவர்களை வீசிவிட்டோம். அதன் காரணமாகவே போட்டி அவர்களது பக்கம் சென்றது. ஆனாலும் ஷர்துல் தாகூர், வைபவ் ஆகியோர் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் எங்களது அணியை போட்டிக்குள் கொண்டு வந்தனர். அதன்பிறகு அவர்களை இறுதிவரை விளையாட வைத்து போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று முடிவு செய்தோம். 

அதேபோன்று போட்டியின் கடைசி 20ஆவது ஓவரை சுழற்பந்து வீச்சாளரை வைத்து வீசுவதா? அல்லது வேகப்பந்து வீச்சாளரை வைத்து வீசுவதா? என்ற ஒரு சந்தேகமும் இருந்தது. ஆனால் நான் என்னுடைய சுழற்பந்து வீச்சாளர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். அதோடு இன்றைய நாளில் எந்த சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக வீசி இருக்கிறாரோ அவருக்கு கொடுத்தால் சரியாக இருக்கும் என்பதனாலே வருண் சக்கரவர்த்தியை அழைத்து பந்துவீச சொன்னேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை