வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியடைந்தது ஏமாற்றமளிக்கிறது - சாம் கரண்!

Updated: Fri, Apr 19 2024 13:15 IST
வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியடைந்தது ஏமாற்றமளிக்கிறது - சாம் கரண்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சண்டிகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரர் இஷான் கிஷான் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - ரோஹித் சர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

இதில் ரோஹித் சர்மா 36 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த சூர்யகுமார் யாதவும் 78 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் திலக் வர்மா 34  ரன்களையும், டிம் டேவிட் 14 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் சாம் கரண் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் சாம் கரன், பிரப்ஷிம்ரன் சிங், லியாம் லிவிங்ஸ்டோன், ரைலீ ரூஸோவ், ஹர்ப்ரீப் பாட்டியா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த ஷஷாங்க் சிங் - அஷுதோஷ் சர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷஷாங்க் சிங் 41 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

அதன்பின்னும் அதிரடியாக விளையாடி வந்த அஷுதோஷ் சர்மா அரைசதம் கடந்த நிலையில் 2 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 61 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்நிலையில் இப்போட்டியில்  அடைந்த தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரன், “இன்றைய போட்டியில் நாங்கள் வெற்றிக்கு நெருங்கி வந்து விட்டோம். அருகாமையில் வந்து தோற்றது ஏமாற்றத்தை அளிக்கிறது. எங்கள் அணிக்கு பரபரப்பான ஆட்டம் பிடித்து போய் விட்டது. அஷுதோஷ் சர்மா -ஷஷாங்க் சிங் ஆகியோரது ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது. இருவரால் தான் நெருங்கி வந்தோம். இவ்வாறு நெருக்கமாக வந்து தோற்றதால் எங்களுக்கு இதயம் நொறுங்கி விட்டது. இனி வரும் போட்டியில் நெருங்கி வந்தால் நாங்கள் வெற்றி பெறுவோம். தோல்வியை தழுவினாலும் எங்களது நம்பிக்கை அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை