ஐபிஎல் 2024: டி காக் அரைசதம்; குர்னால் பாண்டியா அதிரடி ஃபினிஷிங் - பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு!

Updated: Sat, Mar 30 2024 21:24 IST
ஐபிஎல் 2024: டி காக் அரைசதம்; குர்னால் பாண்டியா அதிரடி ஃபினிஷிங் - பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு (Image Source: Google)

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரி 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணிக்கு குயின்டன் டி காக் - கேஎல் ராகுல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். 

இதில் அதிரடியாக விளையாட முயற்சித்த கேஎல் ராகுல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 15 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் குயின்டன் டி காக் ஒருமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் அதிரடியாக விளையாடும் முனைப்புடன் ஆடினார். அதன் பயனாக ராகுல் சஹார் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசிய ஸ்டொய்னிஸ் அடுத்த பந்திலேயே விக்கெட்டையும் இழந்தார். 

பின்னர் களமிறங்கிய கேப்டன் நிக்கலோஸ் பூரன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார். அதேசமயம் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய் குயின்டன் டி காக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 54 ரன்கள் எடுத்த நிலையில் குயின்டன் டி காக் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் கைப்பற்றினார். அதன்பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் நிக்கோலஸ் பூரன் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 42 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அதன்பின் வந்த குர்னால் பாண்டியா அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் களமிறங்கிய ஆயூஷ் பதோனி, ரவி பிஷ்னோய் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குர்னால் பாண்டியா 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 43 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களைச் சேர்த்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் சாம் கரண் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை