ஐபிஎல் 2024: சதமடித்த கெய்க்வாட்; சிக்ஸர் மழை பொழிந்த தூபே - லக்னோ அணிக்கு 211 ரன்கள் இலக்கு!

Updated: Tue, Apr 23 2024 21:24 IST
Image Source: Google

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 39ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடியது. சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். ஏற்கெனவே இத்தொடரில் லக்னோ அணியிடம் தோல்வியைத் தழுவிய சிஎஸ்கே அணி அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியில் களமிறங்கியது. 

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - அஜிங்கியா ரஹானே ஆகியோர் களமிறங்கினர். இதில் ரஹானே ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் முதல் ஓவரிலேயே பெவிலியன் திரும்பினார். மறுபக்கம் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்கம் முதலே ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய டேரில் மிட்செல் 11 ரன்களில் ஆட்டமிழந்து மீன்டும் ஏமாற்றமளித்தார். பின்னர் ருதுராஜுடன் இணைந்த ரவீந்திர ஜடேஜா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார். 

இதில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் கடந்து அசத்தினார். பின் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் தூபே வழக்கம் போல் அதிரடியாக விளையாடி சிக்ஸர்களை பறக்கவிட்டார். அதுவரை பவுண்டரிகளை மட்டுமே அடித்து வந்த ருதுராஜ் கெய்க்வாட்டும் சிக்ஸர்களை விளாச இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைத் தாண்டியது. பின் ருதுராஜ் கெய்க்வாட் 56 பந்துகளில் தனது இரண்டாவது ஐபிஎல் சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். 

இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக சதமடித்த முதல் வீரர் எனும் சாதனையையும் ருதுராஜ் கெய்க்வாட் படைத்தார். மறுபக்கம் தொடர்ந்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசித்தள்ளிய ஷிவம் தூபே 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடியதுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைக்க, அணியின் ஸ்கோரும் 200 ரன்களைத் தாண்டியாது. அதன்பின் 3 பவுண்டரி, 7 சிகஸர்கள் என 66 ரன்களைச் சேர்த்திருந்த ஷிவம் தூபே எதிர்பாராதவிதமாக ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அடுத்து களமிறங்கிய மகேந்திர சிங் தோனி பவுண்டரி அடித்து இன்னிங்ஸை முடிக்க, மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 12 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 108 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 210 ரன்களைக் குவித்தது. லக்னோ அணி தரப்பில் மேட் ஹென்றி, யாஷ் தாக்கூர், மொஹ்சின் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை