17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இப்போட்டியில் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா 12 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் ருதுராஜுடன் இணைந்த அஜிங்கியா ரஹானே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டார். அதன்பின் அதிரடி காட்ட தொடங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 23 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த அஜிங்கியா ரஹானே - ஷிவம் தூபே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிலும் குறிப்பாக ஷிவம் தூபே வழக்கம்போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்சர்களை விளாசித்தள்ளினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களை கடந்தது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் தூபே 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 45 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அஜிங்கியா ரஹானேவும் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ரவீந்திரா ஜடேஜா - டேரில் மிட்செல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் டேரில் மிட்செல் 11 ரன்களை மட்டுமே எடுத்த ஆட்டமிழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா 31 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை சேர்த்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர், நடராஜன், கம்மின்ஸ், ஷபாஸ் அஹ்மத், உனாத்கட் ஆகியொர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News