ஐபிஎல் 2024: போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழ்நாடு அரசு!

Updated: Thu, Mar 21 2024 12:03 IST
ஐபிஎல் 2024: போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழ்நாடு அரசு! (Image Source: Google)

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியிலேயே ரசிகர்களில் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இப்போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஒருமாதமாக சென்னையில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதையடுத்து நேற்றைய தினம் ஆர்சிபி அணி வீரர்களும் சென்னை வந்தடைந்து தங்கள் பயிற்சிகளை மேற்கொண்டனர். அதிலும் குறிப்பாக அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ஃபாஃப் டூ பிளெசிஸ் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்ட காணொளிகள் வைரலானது. இந்நிலையில் இப்போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு தமிழ்நாடு அரசு தரப்பில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் ஆன்லைன் டிக்கெட்டைக் காட்டி மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இப்போட்டி நடைபெறும் 3 மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்து 3 மணி நேரத்திற்கு பின்பு சேப்பாக்கத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு மாநகர பேருந்துகளில் செல்லலாம் என்று அறிவித்துள்ளது. அதேசமயம் குளிர்சாதன பேருந்துகளில் இந்த சலுகை இல்லை என்பதையும் போக்குவரத்து துறை தெளிவுப்படுத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை