கடினமாக உழைக்க உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை - ஜோஸ் பட்லர்!

Updated: Sun, Apr 07 2024 13:23 IST
கடினமாக உழைக்க உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை - ஜோஸ் பட்லர்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக தங்களது நான்காவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது விராட் கோலியின் சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்தது.

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 12 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் என 113 ரன்களைச் சேர்த்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய யுஸ்வேந்திர சஹால் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் - ஜோஸ் பட்லர் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் தனது சதத்தைப் பதிவுசெய்ததுடன், அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார்.

இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐபிஎல் தொடரில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்த ஜோஸ் பட்லர் ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் ஜோஸ் பட்லர் தனது 100ஆவது ஐபிஎல் போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய பட்லர், “இன்றைய போட்டியில் எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது. ஏனெனில் கடைசி பந்தை நான் சரியாக டைமிங் செய்யவில்லை. இருப்பினும் அது பந்து பவுண்டரி எல்லையை தாண்டிச் சென்றதுடன், அதனால் கிடைத்த வெற்றியால் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் எவ்வளவு காலம் விளையாட்டை விளையாடியிருந்தாலும் உங்களுக்கு அழுத்தங்கள் இருக்கும்.

அதனை நீங்கள் மன தைரியத்துடன் எதிர்கொண்டு உழைக்க வேண்டும். நீங்கள் கடினமாக் உழைக்க உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை. ஒரு கட்டத்தில் அது சரியாக விடும். சில சமயங்களில் அது சரியாகி விடும் என்று நீங்களே உங்களை நம்பவேண்டும். கடந்த போட்டியில் நான் வெறும் 13 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தாலும், நான் நன்றாக விளையாடுவதாக உணர்ந்தேன். சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் எனக்கு நல்ல தொடர் அமைந்தது.

அதை இங்கும் தொடங்க  ஒரு இன்னிங்ஸ் மட்டுமே தேவைப்பட்டது என்பதை உணர்ந்தேன். நாங்கள் நடப்பு ஐபிஎல் சீசனை நன்றாகத் தொடங்கி உள்ளோம், மேலும் நாங்கள் இப்போது மூன்று சீசன்களாக ஒன்றாக இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். அதன் மூலமாக எங்களுக்கு ஒரு நல்ல விஷயம் கிடைத்துள்ளது. ஆனாலும் நாங்கள் தொடர்ந்து கடினமாக உழைத்து எங்களது வெற்றியை தொடர முயற்சிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை