ஐபிஎல் 2025: உர்வில் படேலை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் போட்டிகள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியிலும் ஏதெனும் ஒரு வீரர் காயமடைவதும் தொடர்கதையாகி வருகிறது.
அந்தவகையில் தற்சமயாம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேலும் ஒரு வீரர் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் வன்ஷ் பேடி காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். முன்னதாக ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் வன்ஷ் பேடி சிஎஸ்கே அணிக்காக அறிமுகமார் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன.
மேலும் அணியின் டீம் ஷீட்டிலும் அவரது பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், இறுதி நேரத்தில் காயத்தை சந்தித்ததன் காரணமாக தீபக் ஹூடா பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தார். இதனையடுத்து வன்ஷ் பேடிக்கு ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரது காயம் தீவிரமடைந்ததை அடுத்து நடப்பு ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்சமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூர் போட்டிகளில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்டர் உர்வில் படேலை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது. முன்னதாக நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரில் திரிபுரா அணிக்கு எதிராக 28 பந்துகளில் சதமடித்ததுடன், டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார்.
மேற்கொண்டு இதுவரை 47 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள உர்வில் படேல் இரண்டு சதங்களுடன் 1162 ரன்களைக் குவித்துள்ளார். இதுதவிர்த்து கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஒப்பந்தமான நிலையிலும் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின் நடப்பு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் உர்வில் படேல் பங்கேற்ற நிலையிலும் அவரை ஏலம் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை.
இந்நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.30 லட்சத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்துள்ளது. முன்னதாக சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், குர்ஜப்நீத் சிங் உள்ளிட்டோரும் காயம் காரணமாக விலகிய நிலையில் அவர்களுக்கு பதிலாக ஆயூஷ் மாத்ரே, டெவால்ட் பிரீவிஸ் உள்ளிட்டோரை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஐபிஎல் தொடருக்கானா பிளே ஆஃப் வாய்ப்பை சிஎஸ்கே அணி இழந்துள்ள நிலையில், தற்போது அடுத்த சீசனுக்கான தயாரிப்புகளை அணி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
Also Read: LIVE Cricket Score
சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்எஸ் தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மதீஷா பதிரானா, நூர் அகமது, ரவிச்சந்திரன் அஸ்வின், டெவோன் கான்வே, கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சாம் கரன், ஷேக் ரஷித், ஆயூஷ் மத்ரே, அன்ஷுல் கம்போஜ், முகேஷ் சௌத்ரி, தீபக் ஹூடா, டெவால்ட் பிரீவிஸ், நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ணன் கோஷ், ஸ்ரேயாஸ் கோபால், உர்வில் படேல், ஆண்ட்ரே சித்தார்த்.