ஐபிஎல் 2025: சாய் சுதர்ஷன் அரைசதம்; மும்பை அணிக்கு 197 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், கேப்டன் ஷுப்மன் கில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 38 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லரும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.
இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், ஜோஸ் பட்லர் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 39 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷாருக் கானும் அதிரடியாக விளையாடும் முயற்சியில் 9 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாய் சுதர்ஷனும் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 63 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இறுதியில் ராகுல் திவேத்தியா ரன்கள் ஏதுமின்றியும், அதிரடியாக விளையாடி வந்த ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 2 சிக்ஸர்களுடன் 18 ரன்களிலும், ரஷித் கான் ஒரு சிக்ஸருடன் 6 ரன்களிலும், சாய் கிஷோர் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், ட்ரென்ட் போல்ட், தீபக் சஹார், முஜீப் உர் ரஹ்மான் மற்றும் சத்யநாராயன ராஜு ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.