ஆர்சிபி போட்டியையும் தவறவிடும் சஞ்சு சாம்சன்; பின்னடைவில் ராயல்ஸ்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறு வாய்ப்பையும் ஏறத்தாழ நழுவவிட்டுள்ளது.
ஏனெனில் அந்த அணி இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இதனால் எஞ்சியுள்ள 6 போட்டிகளிலும் அந்த அணி சிறப்பான ரன் ரேட்டில் வெற்றிபெறுவது அவசியம் என்பதால் அந்த அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக அந்த அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியை ராஜஸ்தான் ராயல்ஸின் கேப்டன் சஞ்சு சாம்சன் தவறவிடுவார் என்று கூறப்படுகிறது. அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியின் சஞ்சு சாம்சன் காயமடைந்ததுடன், ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் அவரது வலி தீவிரமடைந்தததை தொடர்ந்து மேற்கொண்டு அவரால் பேட்டிங் செய்ய முடியவில்லை.
இதனையடுத்து சஞ்சு சாம்சனுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் அவரது ஸ்கேன் பரிசோதனையின் முடிவில் காயம் தீவிரமடைந்துள்ளதாகவும், அதன் காரணமாக ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் இருந்தும் சஞ்சு சாம்சன் விலகுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரனமாக இப்போட்டியிலும் ரியான் பராக் ராஜஸ்தான் ராயல்ஸின் கேப்டனாக செயல்படவுள்ளார்.
ஏற்கெனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கில் சொதப்பி வரும் நிலையில் தற்போது சஞ்சு சாம்சனும் காயம் காரணமாக இப்போட்டியில் இருந்து விலகி இருப்பது அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேற்கொண்டு சஞ்சு சாம்சன் காயம் தீவிரமடையும் பட்சத்தில் அவர் தொடரில் இருந்தும் விலகக்கூடும் என்பதும் ரசிகர்களை கவலையடை செய்துள்ளது. இருப்பினும் இதனால் வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் தொடக்க வீர்ராக விளையாடுவார் என்பது ரசிகர்களுக்கு சற்று ஆறுதளிக்கும்.
Also Read: LIVE Cricket Score
ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரான் ஹெட்மையர், சந்தீப் சர்மா, ஜோஃப்ரா ஆர்ச்சர், வநிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேய சிங், நிதிஷ் ராணா, துஷார் தேஷ்பாண்டே, சுபம் துபே, யுத்வீர் சரக், ஃபசல்ஹக் ஃபரூக்கி, வைபவ் சூர்யவன்ஷி, குவேனா மபாகா, குணால் ரத்தோர், அசோக் சர்மா.