ஐபிஎல் 2025: தோனி, தூபே அசத்தல்; லக்னோவை வீழ்த்தி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!

Updated: Mon, Apr 14 2025 23:35 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 30ஆவது ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இன்றைய போட்டிக்கான லக்னோ அணியின் லெவனில் மிட்செல் மார்ஷும், சிஎஸ்கே அணியின் லெவனில் ஷேக் ரஷீத், ஜேமி ஓவர்டன் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர். இதையடுத்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஐடன் மார்க்ரம் - மிட்செல் மார்ஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஐடன் மார்க்ரம் 6 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரரும், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களைக் குவித்தவருமான நிக்கோலஸ் பூரன் 8 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

இதனால் லக்னோ அணி 23 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த மிட்செல் மார்ஷ் மற்றும் கேப்டன் ரிஷப் பந்த் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் மிட்செல் மார்ஷ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆயூஷ் பதோனி அதிரடியாக விளையாடியதுடன் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 22 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் ரிஷப் பந்துடன் இணைந்த அப்துல் சமத் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். மறுபக்கம் ரிஷப் பந்த் 42 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். இறுதியில்  2 சிக்ஸர்களுடன் 20 ரன்களைச் சேர்த்திருந்த அப்துல் சமத் விக்கெட்டை இழக்க, அடுத்த பந்திலேயே 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 63 ரன்களைச் சேர்த்திருந்த ரிஷப் பந்தும் ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களைச் சேர்த்தது. சிஎஸ்கே அணி தரப்பில் மதீஷா பதிரானா, ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைபற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அறிமுக வீரர் ஷேக் ரஷீத் - ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தார். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷேக் ரஷீத் 6 பவுண்டரிகளுடன் 27 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து 37 ரன்களை எடுத்திருந்த ரச்சின் ரவீந்திராவும் ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய ராகுல் திரிபாதி 9 ரன்களுக்கும், ரவீந்திர ஜடேஜா 7 ரன்களுக்கும், விஜய் ஷங்கர் 9 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் சிஎஸ்கே அணி 111 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஷிவம் தூபேவுடன் இணைந்த கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் ஷிவம் தூபே பந்துகளை எதிர்கொள்ள தடுமாறியதன் காரணமாக, கடைசி இரண்டு ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிக்கு 24 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 

Also Read: Funding To Save Test Cricket

அதேசமயம் லக்னோ அணி தரப்பில் ஷர்தூல் தாக்கூர் 19ஆவது ஓவரை வீசிய நிலையில், அந்த ஓவரில் ஷிவம் தூபே ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரும், எம் எஸ் தோனி ஒரு பவுண்டரியையும் விளாசி மொத்தமாக 19 ரன்களைச் சேர்த்தனர். இதன்மூலம் சிஎஸ்கே அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை ஏற்பட்டது. இறுதியில் ஷிவம் தூபே 43 ரன்களையும், எம் எஸ் தோனி 26 ரன்களையும் சேர்க்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி இந்த சீனில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை