அயர்லாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று பெல்ஃபெஸ்டில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்து ஆஃப்கானிஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தானுக்கு ஹஸ்ரதுல்லா ஸஸாய் - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸஸாய் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரஹ்மனுல்லா குர்பாஸ் அரைசதம் கடந்த கையோடு 53 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய இப்ராஹிம் ஸத்ரான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
பின் அவரும் அரைசதத்தைப் பதிவுசெய்யாமல் 36 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார். இறுதில் நஜிபுல்லா ஸத்ரான் ஓரளவு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நஜிபுல்லா ஸத்ரான் 18 பந்துகளில் 42 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.