அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆqப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இத்தொடரின் முதல் மற்றும் 2ஆவது டி20 போட்டியில் அயர்லாந்தும், 3ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 பெல்ஃபெஸ்டில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டம் 11 ஓவராகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நஜிபுல்லா ஸத்ரான் அரை சதமடித்தார். கடைசி கட்டமாக அதிரடி காட்டிய ரஷித்கான் 10 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 31 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் பால் ஸ்டிர்லிங் 20 ரன்களிலும், கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி 15 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜார்ஜ் டக்ரெல் அதிகபட்சமாக 41 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், அயர்லாந்து 20 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஷித் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரில் இரு அணிகளும் 2-2 என சமனிலை வகிக்கிறது. மேலும் வெற்றியாளரை தீர்மானிக்கும் 5ஆவது மற்றும் கடைசி போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது.