இவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் - யுவராஜ் சிங்!

Updated: Wed, Jun 29 2022 23:16 IST
IRE vs IND 2nd T20I: Yuvraj Tweets Hooda and Samson Deserves More Chance (Image Source: Google)

இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அசத்தியது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 2ஆவது டி20 ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 225 ரன்கள் என்ற இமாலய ரன் குவிப்பினை வழங்க அதனை துரத்திய அயர்லாந்து அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 221 ரன்கள் குவித்து வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 77 ரன்களையும், 3ஆவது வீரராக விளையாடிய தீபக் ஹூடா 104 ரன்கள் குவித்தும் அசத்தினார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் வாய்ப்பினைப் பெற்ற சஞ்சு சாம்சன் இந்திய அணிக்காக அறிமுகமாகி 7 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். 

அதேபோன்று அவ்வப்போது இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு வரும் தீபக் ஹூடாவும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக சதம் விளாசிய நான்காவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

இந்நிலையில் தீபக் ஹூடா அடித்த இந்த சதத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் தீபக் ஹூடாவை பாராட்டி இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அதில் தீபக் ஹூடாவுடன் சேர்ந்து சஞ்சு சாம்சனையும் அவர் வெகுவாக பாராட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தீபக் ஹூடாவின் சிறப்பான ஆட்டம் இந்த போட்டியில் வெளிப்பட்டது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதலாவது சதத்தை அடித்த அவருக்கு வாழ்த்துக்கள். அதோடு சஞ்சு சாம்சனும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவருமே மிக முதிர்ச்சியான ஆட்டத்தை இந்த போட்டியில் வெளிப்படுத்தினர். அதோடு அவர்கள் பந்துகளை பவுண்டரிக்கு அதிகமாக பறக்கவிட்டது அருமையாக இருந்தது.

இவர்கள் இருவருக்குமே இனி வரும் போட்டிகளில் அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும்” என்று பிசிசிஐ-யை டேக் செய்து இவர் இந்த கருத்தைப் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்த வேளையில் இந்த அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்த அவர் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 

அதேபோன்று மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தீபக் ஹூடா முதல் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக துவக்க வீரராக களமிறங்கி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இப்படி முதல் போட்டியில் பிரமாதப்படுத்திய அவர் இரண்டாவது போட்டியிலும் மூன்றாவது வீரராக களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை