IRE vs PAK, 1st T20I: பால்பிர்னி, காம்பெர் அபாரம்; பாகிஸ்தானை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி!

Updated: Fri, May 10 2024 23:17 IST
IRE vs PAK, 1st T20I: பால்பிர்னி, காம்பெர் அபாரம்; பாகிஸ்தானை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி! (Image Source: Google)

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடருக்காக பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகும் முயற்சியில் இறங்கியுள்ளன. அந்தவகையில் பாகிஸ்தான் அணியானது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 

அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி டப்ளினில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் மற்றும் சைம் அயூப் இணை தொடக்க கொடுத்தனர். இதில் ரிஸ்வான் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

அதன்பின் களமிறங்கிய கேப்டன் பாபர் ஆசாம் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். அவருக்கு துணையாக சைம் அயூப்பும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் பாபர் அசாம் தனது அரைசதத்தைக் கடந்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சைம் அயூப் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 47 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்திருந்த பாபர் ஆசாமும் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 57 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அசாம் கான், ஷதாப் கான் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மறுபக்கம் 20 ரன்களை எடுத்திருந்த ஃபகர் ஸமானும் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய இஃப்திகார் அஹ்மாத் - ஷாஹீன் அஃப்ரிடி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இஃப்திகார் அஹ்மத் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களையும், ஷாஹீன் அஃப்ரிடி 2 சிக்ஸர்களுடன் 14 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்துள்ளது. அயர்லாந்து அணி தரப்பில் கிரேய்க் யங் 2 விக்கெட்டுகளையும், கரெத் டெலானி மற்றும் மார்க் அதிர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணிக்கு ஆண்ட்ரூ பால்பிர்னி - கேப்டன் பால் ஸ்டிர்லிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்டிர்லிங் 8 ரன்களிலும், அடுத்து வந்த லோர்கன் டக்கர் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த பால்பிர்னி - ஹாரி டெக்டர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரூ பால்பிர்னி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து சத்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹாரி டெக்டர் 36 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜார்ஜ் டெக்ரேலும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 24 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். மேலும் மறுபக்கம் அபாரமாக விளையாடிய பார்ல்பிர்னி 10 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 77 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இதனால் அயர்லாந்து அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. பாகிஸ்தான் தரப்பில் கடைசி ஓவரை ஹாரிஸ் ராவுஃப் வீச அதனை எதிர்கொண்ட கர்டிஸ் காம்பேர் முதல் பந்தில் பவுண்டரியும், மூன்றாவது பந்தில் 2 ரன்களையும், நான்காவது பந்தில் பவுண்டரியும் என 11 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனார். இதன்மூலம் அயர்லாந்து அணி 19.5 ஓவர்களில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை