வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்துசெய்யப்பட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியிலும் மழை குறுக்கீடு இருந்ததன் காரணமாக ஆட்டம் 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பதுவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் பால் ஸ்டிர்லிங், ஸ்டீபன் தொஹானி ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹேரி டெக்டர் - கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 42 ரன்களில் பால்பிர்னி விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த லோர்கன் டக்கர், கர்டிஸ் காம்பெர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் டெக்டருடன் இணைந்த டக்ரெலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹேரி டெக்டர் சதமடித்து அசத்தியதுடன், 7 பவுண்டரி, 10 சிக்சர்களை விளாசி 140 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டக்ரெலும் 74 ரன்களைச் சேர்த்து உதவினார்.
இதமூலம் அயர்லாந்து அணி 45 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்களைக் குவித்தது. வங்கதேச தரப்பில் ஹசன் மஹ்முத், சொரிஃபுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து 320 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்கதேச அணி விளையாடிவருகிறது.