இந்த போட்டி மிகவும் கடினமாக இருந்தது - ரியான் பராக்!

Updated: Sun, Mar 23 2025 21:45 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இஷான் கிஷனின் அபாரமான சதத்தின் மூலமாகவும், டிராவிஸ் ஹெட்டின் அரைசதத்தின் காரணமாகவும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இஷான் கிஷன் 106 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 67 ரன்களையும் எடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

அதன்பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், நிதீஷ் ரானா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த சஞ்சு சாம்சன் - துருவ் ஜூரெல் இணை அதிரடியாக விளையாடி தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 4ஆவது விக்கெட்டிற்கு 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். 

அதன்பின் 66 ரன்களில் சஞ்சு சாம்சனும், துருவ் ஜூரெல் 70 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் 42 ரன்களையும், ஷுபம் தூபே 34 ரன்களையும் சேர்த்தனர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ரியான் பராக், “நான் எதிர்பார்த்தது போலவே இந்த போட்டி மிகவும் கடினமாக இருந்தது. இந்த அட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது. ஆனால் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். இன்றைய ஆட்டம் குறித்து நாங்கள் நிறைய பேச வேண்டி உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்று பந்துவீசை தேர்வு செய்ய வேண்டும் என்பதை அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான்.

மேலும் அது நல்ல முடிவு என்று தான் தோன்று கிறது. ஆனால் அதனை சிறப்பாக செய்திருக்க வேண்டும். ஏனெனில் இந்த போட்டியில் 280 ரன்களை துரத்த வேண்டும் என்பது எங்களுக்கு பிரச்சனை இல்லை. டாஸின் போதே நான் அதனை கூறி இருந்தேன். ஆனால் எதிரணியை 220-240 ரன்களில் சுருட்டி இருந்தால் அது எட்டக்கூடிய ஒன்றாக இருந்திருக்கும். இந்த போட்டியில் நாங்கள் சில நேர்மறையான விசயங்களைப் பெற்றுள்ளோம்.

சஞ்சு சாம்சன் மற்றும் துருவு ஜூரெல் பேட்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது. அவர்களைத் தொடர்ந்து ஷிம்ரான் ஹெட்மையர், ஷுபம் தூபே ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டு ஸ்கோரை உயர்த்தினர். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் துஷார் தேஷ்பாண்டே மிகவும் சிறப்பாக பந்துவீசினார். ஒரு வெற்றியோ அல்லது தோல்வியோ, நாம் கற்றுக்கொண்டவற்றை எடுத்துக்கொள்கிறோம், பின்னர் அதனை மறந்துவிடுகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை