IND vs AUS, 1st Test: ஜடேஜா, அக்ஸர் அசத்தல்; வலிமையான நிலையில் இந்தியா!

Updated: Fri, Feb 10 2023 17:09 IST
Jadeja-Axar Fifties Hurt Australia After Rohit's Ton; India Lead By 144 Runs At Stumps On Day 2 (Image Source: Google)

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், இன்று முதல் தொடங்கியுள்ளது. நாகபுரியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 63.5 ஓவர்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் மார்னஸ் லபுசாக்னே அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். சிராஜ், ஷமி தலா 1 விக்கெட்டை எடுத்தார்கள். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் இந்திய அணி, 24 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்தது. அதன்பின் 100 ரன்கள் பின் தங்கிய நிலையில் ரோஹித் சர்மா 56 ரன்களுடனும், அஸ்வின் ரன்கள் ஏதுமின்றியும் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். 

இதில் ரோஹித் - அஸ்வின் ஜோடி, 42 ரன்கள் சேர்த்தது. அதன்பின் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்த அஸ்வின், மர்ஃபி பந்தில் ஆட்டமிழந்தார். புஜாராவும் 7 ரன்கள் மர்ஃபி பந்தில் ஆட்டமிழக்க, விராட் கோலி களமிறங்கினார். 2ஆம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 52 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 85, கோலி 12 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்திய அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளையும் மர்ஃபி எடுத்தார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு வீசப்பட்ட முதல் பந்திலேயே கோலி 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அறிமுக வீரர் சூர்யகுமார் யாதவ், 8 ரன்களில் லயன் பந்தில் போல்ட் ஆகி ஏமாற்றமளித்தார். மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்தபோதும் தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய ரோஹித் சர்மா, 171 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் சதமடித்தார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் எடுத்துள்ள 9ஆவது சதம் இது. அதன்பின் 120 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் சர்மா ஆட்டமிழக்க, அடுத்து வந்த அறிமுக வீரர் கேஎஸ் பரத்துடம் 8 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா - அக்ஸர் படேல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் 300 ரன்களைக் கடந்ததது. இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 66 ரன்களுடனும், அக்ஸர் படேல் 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் டாட் மர்ஃபி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை