இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே இத்தொடரில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த தென் ஆப்பிரிக்க அணியானது, நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் தோல்வியை சந்தித்ததால் இந்த தொடரை தற்போது இந்திய அணியுடன் சமன் செய்துள்ளது. இதனை தொடர்ந்து பெங்களூருவில் நடைபெறவிருக்கும் கடைசி டி20 போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற 4ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 169 ரன்களை குவிக்க 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த தொடரில் 200 ரன்களைக் கூட எளிதாக சேசிங் செய்து வெற்றி பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி இந்த போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Advertisement

ஆனால் இம்முறை இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் எந்த ஒரு கட்டத்திலும் கொஞ்சம் கூட முன்னிலை பெறாமல் 16.5 ஓவர்களில் வெறும் 87 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியின் காரணமாக தற்போது இந்த தொடரானது சமநிலை அடைந்துள்ளது. 

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் தற்காலிக கேப்டனான கேஷவ் மஹராஜ், “இந்த போட்டியில் நாங்கள் நினைத்த எந்த திட்டமும் சரிவர செல்லவில்லை. அதேபோன்று கடைசி சில ஓவர்களில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் எங்களுக்கு எதிராக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிகப்பெரிய அளவில் ரன்களை சேர்த்தனர்.

முதல் 15 ஓவர்கள் வரை நாங்கள் சிறப்பாக பந்துவீசி இருந்தாலும் அதன் பின்னர் மைதானம் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்தது. ஆனால் நாங்கள் பேட்டிங் செய்யும் போது எங்கள் அணியின் வீரர்கள் இந்த மைதானத்தின் தன்மையை அறிந்து விளையாட தவறிவிட்டனர். இன்னும் நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். 

பவர்ப்ளே ஓவரின்போது பேட்டிங்கில் மிகச் சிறப்பான துவக்கம் கிடைக்க வேண்டியது அணிக்கு தேவையான ஒன்று. ஆனால் இம்முறை எங்களால் இந்த போட்டியில் பெரிய பாட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை. அந்த அளவிற்கு இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி விட்டனர். தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக இறுதிகட்ட ஓவர்களில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

Advertisement

இந்திய வீரர்களுக்கு எதிராக நாங்கள் இன்னும் சிறப்பான திட்டங்களை வகுத்தால் மட்டுமே அவர்களை தடுத்து நிறுத்த முடியும். இந்தியாவில் ஸ்பின் பவுலர்கள் இந்திய அணிக்கு எதிராக பந்து வீசுவது மிகவும் கடினம். ஏனெனில் இந்தியாவில் உள்ள சிறிய மைதானங்களில் ஸ்பின்னர்கள் ஆகிய நாங்கள் இந்திய பேட்ஸ்மன்களுக்கு எதிராக பந்து வீசுவது என்பது சவாலான ஒரு காரியம். 

அடுத்து வரும் பெங்களூரு போட்டியில் எவ்வாறு செயல்படப் போகிறோம் என்பதை நாங்கள் தற்போது திட்டமிட துவங்கியுள்ளோம். அடுத்த போட்டி இரு அணிகளுக்குமே மிக சவாலான ஒன்றாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News