ஐபிஎல் 2022 தொடரின் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று இறுதி கட்ட பரபரப்பில் மும்பை நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முக்கியமான 61ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

இப்போட்டி கொல்கத்தாவுக்கு வாழ்வா – சாவா என்ற போட்டியாக அமைந்த நிலையில் டாஸ் என்ற அந்த அணி முதலில் தைரியமாக பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் அதற்கேற்றார்போல் பேட்டிங் செய்யாத அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் வெங்கடேஷ் ஐயர் 7 (6) அஜிங்கிய ரகானே 28 (24) நிதிஷ் ராணா 26 (16) என சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர்.

Advertisement

அந்த நிலைமையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 15 (9) ரன்களிலும் ரிங்கு சிங் 5 (6) ரன்களிலும் அவுட்டாகி மேலும் பின்னடைவை கொடுத்தனர். அதனால் 94/5 திணறிய கொல்கத்தா 150 ரன்களை தாண்டுமா என்று கேள்வி எழுந்த நிலையில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் ஆண்ட்ரே ரசல் வழக்கம்போல தனது முரட்டுத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

அவருக்கு உறுதுணையாக நின்ற சாம் பில்லிங்ஸ் 34 (29) முக்கியமான ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தாலும் கடைசி வரை அவுட்டாகாமல் 3 பவுண்டரி 4 சிக்சர்களை 175.00 என்ற ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்கவிட்ட ரசல் 49* (28) ரன்கள் எடுத்து அபாரமான பினிஷிங் கொடுத்து காப்பாற்றினார். அதனால் தப்பிய கொல்கத்தா 20 ஓவர்களில் 177/6 ரன்கள் எடுக்க ஹைதராபாத் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை தொடர்ந்து 178 என்ற இலக்கை துரத்திய ஹைதராபாத்துக்கு கேப்டன் கேன் வில்லியம்சன் 9 (17) ராகுல் திரிபாதி 9 (12) என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். இருப்பினும் மறுபுறம் அதிரடி காட்டிய இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 4 பவுண்டரி 2 சிக்சருடன் 43 (28) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அவரைப் போலவே நம்பிக்கை கொடுத்த ஐடன் மார்க்ரம் 3 சிக்சருடன் அதிரடியாக 32 (25) ரன்கள் எடுத்து அவுட்டானர்.

அந்த நிலைமையில் நிக்கோலஸ் பூரன் 2 (3) வாஷிங்டன் சுந்தர் 4 (9) ஆகியோரும் கொல்கதாவின் அபார பந்துவீச்சு ஈடுகொடுக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 20 ஓவர்களில் 123/8 ரன்களை மட்டுமே எடுத்த ஹைதராபாத் படுதோல்வியை சந்தித்தது. இதன்மூலம் கேகேஆர் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆண்ட்ரே ரசல் 3 விக்கெட்டுகளையும், டிம் சவுத்தி 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

Advertisement

அதனால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்ட அந்த அணிக்கு கடைசி போட்டியில் வென்று அதிர்ஷ்டத்தின் உதவியிருந்தால் நாக் – அவுட் சுற்றுக்கு செல்லலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட முக்கியமான போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் உட்பட அனைவரும் ஏமாற்றிய நிலையில் மீண்டும் ஒருமுறை பேட்டிங்கில் 49 ரன்களும் பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளும் எடுத்து ஆல்-ரவுண்டராக அசத்தி தனி ஒருவனை போல கொல்கத்தாவை காப்பாற்றிய ஆண்ட்ரே ரஸ்ஸலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

கடந்த பல வருடங்களாகவே கொல்கத்தாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இது போன்ற பல போட்டிகளில் தனி ஒருவனை போல காப்பாற்றிய அவரை இந்த வருடம் அந்த அணி நிர்வாகம் 12 கோடி என்ற பெரிய தொகைக்கு தக்க வைத்தது. அந்த வகையில் இதுவரை பங்கேற்ற 13 போட்டிகளில் 330 ரன்களை 182.32 என்ற ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்கவிட்ட அவர் 17 விக்கெட்டுகளையும் எடுத்து அற்புதமான ஆல்-ரவுண்டராக நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டு வருகிறார்.

இப்படி 300க்கும் மேற்பட்ட ரன்களையும் 10க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் எடுத்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக சீசன்களில் 300+ ரன்கள் 10+ விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற ஜாம்பவான் ஜேக் காலிஸ் சாதனையை உடைத்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். 

  • ஆண்ட்ரே ரசல் : 4* சீசன்கள்
  • ஜேக் காலிஸ் : 3 சீசன்கள்
  • ஷேன் வாட்சன் : 2 சீசன்கள்
Advertisement

மேலும் நேற்றைய போட்டியில் 49 ரன்களை விளாசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் பந்துகள் அடிப்படையில் அதிவேகமாக 2000 ரன்களை எடுத்த பேட்ஸ்மேன் என்ற வரலாற்று சாதனையும் படைத்தார். 

  • ஆண்ட்ரே ரசல் : 1120 பந்துகள்
  • விரேந்தர் சேவாக் : 1211 பந்துகள்
  • கிறிஸ் கெயில் : 1251 பந்துகள்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News