SL vs IND, 3rd ODI: தோல்வியைத் தவிர்த்து தொடரை சமன்செய்யுமா இந்தியா?

Updated: Wed, Aug 07 2024 11:58 IST
Image Source: Google

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா 230 ரன்களைச் சேர்த்து போட்டியை டையில் முடிந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை கைப்பற்றும். அதேசமயம் இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை சமன்செய்யும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்திய அணி

ஏற்கெனவே இத்தொடரில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ள இந்திய அணியானது, மூன்றாவது போட்டியில் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் ஒருசில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் ரோஹித் சர்மா, அக்ஸர் படேல் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்கவில்லை. 

அதிலும் குறிப்பாக அணியின் நட்சத்திர வீரர்காளாக விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷிவம் தூபே ஆகியோர் இரண்டு போட்டிகளிலும் சொல்லிக்கொள்ளும் அளவில் விளையாடவில்லை. பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தொடர்ந்து ரன்களை கட்டுப்படுத்த தவறிவருகின்றனர். அவர்களுடன் ஷிவம் தூபேவின் பந்துவீச்சும் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக இருந்து வருகிறது. 

இதன் காரணமாக மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது கேஎல் ராகுல், ஷிவம் தூபே மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களது இடத்தில் அறிமுக வீரர்களான ரியான் பராக், ஹர்ஷித் ரானா ஆகியோருடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் நிகழும் பட்சத்தில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சானது வலிமை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியா உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர்/ரிஷப் பந்த், கே.எல். ராகுல், ரியான் பராக்/ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரனா/முகமது சிராஜ்.

இலங்கை அணி

மறுபக்கம் இலங்கை அணி ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இரண்டாவது போட்டியில் வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதனால் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் அந்த அணி விளையாடவுள்ளது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் பதும் நிஷங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, துனித் வெல்லாலகே ஆகியோருடன் கடந்த போட்டியில் கமிந்து மெண்டிஸும் அசத்தினார். 

ஆனல் குசால் மெண்டிஸ், சரித் அசலங்கா, சதீரா சமரவிக்ரமா, ஜனித் லியானகே உள்ளிட்ட வீரர்கள் பேட்டிங்கில் தடுமாறுவது அணிக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கம் பந்துவீச்சை பொறுத்தவரையில் ஜெஃப்ரி வண்டர்சே, துனித் வெல்லாலகே ஆகியோருடன் கேப்டன் சரித் அசலங்காவும் அபாரமாக செயல்பட்டு வருவது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் வேகப்பந்து வீச்சாளர் சோபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இலங்கை உத்தேச லெவன்: பதும் நிஷங்கா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க (கே), கமிந்து மெண்டிஸ், ஜனித் லியானகே, துனித் வெல்லாலகே, அகில தனஞ்சய, அசித்த ஃபெர்னாண்டோ, ஜெஃப்ரி வண்டர்சே

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை