ஐபிஎல் இறுதிப்போட்டியில் புதிய வரலாறு படைத்த குர்னால் பாண்டியா!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியதுடன், முதல் முறையாக கோப்பையையும் வென்று சாதித்துள்ளது.
இப்போட்டியில் ஆர்சிபி அணி தரப்பில் பந்துவீச்சில் அபாரமான செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த குர்னால் பாண்டியா ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். அதன்படி இப்போட்டியில் அவர் நான்கு ஓவர்களில் 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் இரண்டு ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
முன்னதாக, ஐபிஎல் 2017 இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய குர்னால் பாண்டியா ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஆட்ட நாயகன் விருதை வென்றிருந்தார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடர் ஆர்சிபி அணிக்காக 15 போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தமாக 17 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஆர்சிபி அணிக்காக இரண்டாவது வெற்றிகரமான பந்து வீச்சாளராகவும் இருந்துள்ளார்.
இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்களையும், ரஜத் படிதார் 26 ரன்களையும், லியாம் லிவிங்ஸ்டோன் 25 ரன்களையும், மயங்க் அகர்வால் மற்றும் ஜித்தேஷ் சர்மா அககியோர் தலா 24 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் கைல் ஜேமிசன், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
Also Read: LIVE Cricket Score
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜோஷ் இங்கிலிஸ் 39 ரன்களையும், பிரப்ஷிம்ரன் சிங் 26 ரன்களையும், பிரியான்ஷ் ஆர்யா 24 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் போராடிய ஷஷாங்க் சிங் 3 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 61 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியாது குறிப்பிடத்தக்கது.