இதுபோன்ற போட்டிகள் தான் என்னை சிறப்பாக செயல்பட வைக்கும் - குல்தீப் யாதவ்!

Updated: Fri, Jul 28 2023 16:08 IST
இதுபோன்ற போட்டிகள் தான் என்னை சிறப்பாக செயல்பட வைக்கும் - குல்தீப் யாதவ்! (Image Source: Google)

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று பார்படாஸ் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 114 ரன்களில் சுருண்டது.

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அவர்களை தவிர்த்து ஹார்டிக் பாண்டியா, ஷர்துல் தாகூர், முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தனர்.

இந்நிலையில் 115 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய இந்திய அணியானது 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மூன்று ஓவர்கள் வீசிய குல்தீப் யாதவ் 2 மெய்டன் ஓவர்களை வீசியது மட்டுமின்றி 6 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய அசத்தினார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

அப்போது பேசிய குல்தீப் யாதவ், “இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். முகேஷ் யாதவ், ஷர்துல் தாகூர், ஹார்டிக் பாண்டியா ஆகியோர் ஆரம்பத்திலேயே விக்கெட்டை எடுத்து கொடுத்து எனக்கும் ஜடேஜாவிற்கும் நல்ல வழிதடத்தை அமைத்துக் கொடுத்தனர்.

அதன்பிறகு நாங்கள் இருவரும் சரியான லென்த்தில் பந்து வீசியதால் விக்கெட்டுகள் கிடைத்தன. அதிலும் குறிப்பாக நான் எனது சரியான ரிதத்தை பிடித்து பந்து வீசியதால் இந்த போட்டியில் விக்கெட் எடுக்க முடிந்தது. நாங்கள் இருவருமே 7 விக்கெட்களை சேர்ந்து எடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி. இது போன்ற போட்டிகளில் கிடைக்கும் நம்பிக்கை என்னை மேலும் சிறப்பாக செயல்பட வைக்கும்.

அதோடு இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் போன்ற சீனியர் வீரர் இருக்கும்போது எனக்கு அது மிகவும் உதவியாக இருக்கிறது. அவர் எனக்கு கொடுக்கும் அறிவுரைகள் என்னை மேலும் சிறந்த ஒரு பவுலராக மாற்றுகிறது. நாங்கள் இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நல்ல முறையில் பிணைப்பில் இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை