LPL 2024: சதமடித்து மிரட்டிய ரைலீ ரூஸோவ்; கலேவை வீழ்த்தி நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஜாஃப்னா!

Updated: Sun, Jul 21 2024 23:38 IST
Image Source: Google

இலங்கையில் நடைபெற்று வந்த லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு கலே மார்வெல்ஸ் மற்றும் ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொழும்புவில் நடைபெற்ற இப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கலே மார்வெல்ஸ் அணிக்கு கேப்டன் நிரோஷன் டிக்வெல்லா - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிக்வெல்லா 5 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அலெக்ஸ் ஹேல்ஸும் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார். 

பின்னர் களமிறங்கிய ஜனித் லியானகே 7 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த டிம் செய்ஃபெர்ட் - பனுகா ராஜபக்ஷா இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை நெருங்கிய டிம் செய்ஃபெர்ட் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 47 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்த நிலையில், மறுபுறம் பனுகா ராஜபக்ஷா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனாலும் அடுத்து களமிறங்கிய சஹான் அர்ராச்சிகே 16 ரன்களுடன் விக்கெட்டை இழந்தனர்.

பின்னர் சிறப்பாக விளையாடி வந்த பனுகா ராஜபக்ஷா 8 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 82 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, கலே மார்வெல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களைச் சேர்த்தது. ஜாஃப்னா கிங்ஸ் தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ 3 விக்க்கெட்டுகளையும், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய ஜாஃப்னா கிங்ஸ் அணியில் தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் பதும் நிஷங்கா முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் - ரைலீ ரூஸோவ் இணை அபாரமாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி தள்ள கலே அணி பந்துவீச்சாளர்கள் செய்வதறியாமல் தடுமாறினர். ஆனால் தங்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய் இருவரும் அரைசதம் கடந்து அணியின் வெற்றியை எளிதாக்கினர். அதிலும் எதிரணி பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளுக்கும் பறக்கவிட்ட ரைலீ ரூஸோவ் 50 பந்துகளில் சதமடித்து மிரட்டினார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரைலீ ரூஸோவ் 9 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 106 ரன்களையும், குசால் மெண்டிஸ் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 72 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஜாஃப்னா கிங்ஸ் அணியானது 15.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் கலே மார்வெல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் ஜாஃப்னா கிங்ஸ் அணி நடப்பு லங்கா பிரீமியர் லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. மேலும் லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஜாஃப்னா ஃபிரான்சைஸ் அணி வெல்லும் 4ஆவது சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை