எல்பிஎல் 2023: ஏலாத்தில் சுரேஷ் ரெய்னாவை புறக்கணித்ததா இலங்கை கிரிக்கெட் வாரியம்!

Updated: Thu, Jun 15 2023 13:18 IST
Image Source: Google

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி ரசிகர்களால் சின்னதல என்று கொண்டாடப்பட்டு வருபவர் சுரேஷ் ரெய்னா. இந்தியாவில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் சுரேஷ் ரெய்னா ஓய்வு பெற்றுள்ளார். இதனால் சுரேஷ் ரெய்னா வெளிநாட்டு கிரிக்கெட் டி20 லீக் போட்டிகளில் விளையாடி வந்தார்.

இதனிடையே ஐபிஎல் தொடரை பின்பற்றி இலங்கையிலும் லங்கா பிரீமியர் லீக் தொடர் 3 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்டது. 4ஆவது சீசனுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் ஜூலை 31ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த நிலையில் எல்பிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் முதல்முறையாக நேற்று நடைபெற்றது. இதில் இலங்கையைச் சேர்ந்த 5 அணிகளின் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

இந்த லங்கா பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்பதற்காக சுரேஷ் ரெய்னா தனது பெயரை ஏலப் பட்டியலில் கொடுத்திருந்தார். இதனால் சுரேஷ் ரெய்னா எந்த அணிக்காக ஒப்பந்தம் செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. எல்பிஎல் ஏலத்தின் 11ஆவது செட்டில் சுரேஷ் ரெய்னாவின் பெயரும் பட்டியலிடப்பட்டிருந்தது.

ஆனால் ஏலத்தை நடத்திய சாரு சர்மா, சுரேஷ் ரெய்னாவின் பெயரை ஏலத்தின் போது குறிப்பிடவில்லை. 11ஆவது செட்டில் இருந்த அத்தனை வீரர்களின் பெயர்களும் ஏலத்தில் விடப்பட்ட நிலையில், சுரேஷ் ரெய்னாவின் பெயர் வேண்டுமென்றே ஏலத்தில் பட்டியலிடப்படவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது ரெய்னாவின் பெயரை ஏலம் நடத்திய சாரு சர்மா மறந்தாரா என்பது குறித்தும் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

அதேபோல் எல்பிஎல் தொடர் ஏலத்தின் சுரேஷ் ரெய்னாவின் பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுவரை சுரேஷ் ரெய்னா தரப்பிலோ, இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பிலோ எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இரு தரப்பிலும் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே, உண்மை என்ன என்பது தெரியவரும். இதனால் ரசிகர்கள் பலரும் குழம்பியுள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை