தனது ட்ரீம் டி20 அணியின் 5 வீரர்களை தேர்வு செய்த ஜெயவர்தனே!
சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவர் இலங்கையின் மஹேலா ஜெயவர்தனே. 149 சர்வதேச டெஸ்ட் மற்றும் 448 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 24,400க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார்.
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றுள்ள மஹேலா ஜெயவர்தனே, ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவருகிறார்.
இந்நிலையில், தனது கனவு டி20 அணியின் 5 வீரர்களை தேர்வு செய்துள்ளார் மஹேலா ஜெயவர்தனே. இதுதொடர்பாக பேசிய ஜெயவர்தனே, “என்னை பொறுத்தமட்டில் டி20 கிரிக்கெட்டில் பவுலர்கள் தான் மிக முக்கியம். அந்தவகையில் பேட்டிங்கும் ஆடக்கூடிய ஸ்பின்னரான ரஷீத் கான் எனது அணியில் இருப்பார். 7-8ஆம் பேட்டிங் ஆர்டரில் பேட்டிங்கும் ஆடுவார். அவரை வெவ்வேறு வித்தியாசமான சூழல்களில், வெவ்வேறு காம்பினேஷன்களில் பயன்படுத்த முடியும். எனவே அவர் தான் எனது முதல் சாய்ஸ்.
ஓபனிங் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான். வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் எனது தேர்வு ”என்று ஜெயவர்தனே கூறினார்.