WPL 2023: மும்பையை 109 ரன்களில் சுருட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீமானித்து.
அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் யஷ்திகா பாட்டிய ஒரு ரன்னுடனும், அடுத்து வந்த அதிரடி வீராங்கனை நாட் ஸ்கைவர் முதல் பந்திலேயேயும், மற்றொரு தொடக்க வீராங்கனை ஹெய்லி மேத்யூஸ் 5 ரன்களுடனும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதனைத்தொடர்ந்து அமெலியா கெர் 8 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் - பூஜா வஸ்த்ரேகர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 26 ரன்களில் பூஜா வஸ்த்ரேகரும், 23 ரன்களில் ஹர்மன்ப்ரீத் கவுரும் விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் இஸி வாங் 23 ரன்களைச் சேர்த்து அணிக்கு உதவினார். மறுபக்கம் அமன்ஜொட் கவுர் 19 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் மரிசேன் கேப், ஷிகா பாண்டே, ஜெஸ் ஜொனசென் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.