பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. அதில் மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய 9ஆவது லீக் போட்டியில் 5 முறை கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டிஒய் பாட்டில் மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

Advertisement

இதை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இளம் தொடக்க வீரர் யாசஸ்வி ஜெய்ஸ்வால் வெறும் 1 ரன்னில் ஜஸ்பிரித் பும்ரா வேகத்தில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்த நிலையில் அடுத்து வந்த டேவூட் படிக்கல் 7 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

Advertisement

இதனால் 48/2 என்ற ஓரளவு சுமாரான தொடக்கம் பெற்ற ராஜஸ்தான் ஆரம்பத்திலேயே தடுமாறிய நிலையில் அடுத்ததாக களமிறங்கிய அதன் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றொரு தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் உடன் இணைந்து அதிரடியாக ரன்களை குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 3-வது விக்கெட்டுக்கு 82 ரன்களைக் குவித்த இந்த ஜோடி மும்பை பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு ராஜஸ்தான் அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தபின் பிரிந்தது. இதில் 21 பந்துகளை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் 1 பவுண்டரி மற்றும் 3 மெகா சிக்ஸர்களை பறக்க விட்டு 30 ரன்கள் எடுத்திருந்தபோது முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தார்.

அப்போது களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் சிம்ரோன் ஹெட்மையர் சந்தித்த முதல் பந்தில் இருந்தே சரவெடியாக பவுண்டரிகளை விளாசினார். மொத்தம் 14 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 3 பவுண்டரி மற்றும் 3 மிகப்பெரிய சிக்சர்களை பறக்கவிட்டு 35 ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் பவுலர்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்த ஜோஸ் பட்லர் ஆரம்பம் முதல் நங்கூரமாக களத்தில் நின்று பவுண்டரிகளையும் சிக்சர்களையும் அடித்து வந்தார்.

அவரை அவுட் செய்ய முடியாமல் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட அனைவரும் திகைத்து நிற்க மறுபுறம் தொடர்ந்து பட்டைய கிளப்பிய ஜோஸ் பட்லர் 68 பந்துகளில் 11 பவுண்டரிகளையும் 5 இமாலய சிக்சர்களையும் பறக்க விட்டு சதம் அடித்து அசத்தினார். இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 2ஆவது சதத்தை பதிவு செய்த அவர் ஐபிஎல் 2022 தொடரில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். ஆரம்பம் முதல் தொல்லை கொடுத்து வந்த அவரை ஒரு வழியாக 19ஆவது ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா கிளீன் போல்ட்டாக்கினார்.

அவருக்கு அடுத்தபடியாக வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் 193 ரன்கள் எடுத்தது. அதன்பின் இலக்கத்தை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 170 ரன்களை மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 

Advertisement

இந்த போட்டியில் மும்பையை கதறவிட்ட ஜோஸ் பட்லரை பார்த்து “நாங்கள் அப்படி என்ன தவறு செய்தோம், ஏன் எப்போது பார்த்தாலும் எங்களுக்கு எதிராக மட்டும் இப்படி ஸ்பெஷலாக அடிக்கிறீர்கள்” என்பது போல மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். ஏனெனில் வரலாற்றில் எப்போதுமே மற்ற அணிகளுக்கு எதிராக தடுமாறினாலும் மும்பை இந்தியன்ஸ் என்று வந்தால் மகிழ்ச்சியுடன் களமிறக்கும் ஜோஸ் பட்லர் அதிரடியாக ரன்களை விளாசி வருகிறார்.

குறிப்பாக மும்பைக்கு எதிராக அவர் விளையாடிய கடைசி 5 போட்டிகளில் 94* (53), 89 (43), 70 (44), 41 (32), 100 (68) என 3 அரை சதங்களும் 1 சதமும் விளாசியுள்ளார். மேலும் மும்பையை பார்த்தால் விஸ்வரூபம் எடுக்கும் மனிதராக இருக்கும் அவர் அந்த அணிக்கு எதிராக வரலாற்றில் 6 இன்னிங்ஸ்சில் விளையாடி 400 ரன்களை 80 என்ற அபாரமான சராசரி விகிதத்தில் 161.29 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து பட்டைய கிளப்பி வருகிறார்.

அதிலும் இன்று தனது 300ஆவது டி20 போட்டியில் விளையாடிய அவர் இதுநாள் வரை மும்பைக்கு அணிக்கு எதிராக வெறும் அரை சதங்கள் மட்டுமே அடித்து வந்த நிலையில் இன்று ஒருபடி மேலே போய் முதல் முறையாக சதம் அடித்து அசத்தினார். மொத்தத்தில் மும்பை இந்தியன்ஸ் என்றால் ஜோஸ் பட்லருக்கு கொள்ளை பிரியம் என இதிலிருந்து தெரிய வருகிறது.

Advertisement

அதேபோல் ஐபிஎல் தொடரில் இரண்டு சதங்களை விளாசிய இரண்டாவது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் எனும் பெருமையையும் ஜோஸ் பட்லர் பெற்றுள்ளார். முன்னதாக இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இரண்டு முறை ஐபிஎல் தொடரில் சதம் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News